#IPL2021 ஆர்சிபிக்கு எதிரான முதல் போட்டி: மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஜோடியில் அதிரடி மாற்றம்
ஐபிஎல் 14வது சீசனின் முதல் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸும் ஆர்சிபியும் மோதுகின்றன. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஜோடியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் 14வது சீசன் இன்று தொடங்குகிறது. சென்னையில் நடக்கும் முதல் போட்டியில், 5 முறை சாம்பியனும் நடப்பு சாம்பியனுமான மும்பை இந்தியன்ஸும், முதல் முறையாக கோப்பையை வெல்ல துடிக்கும் ஆர்சிபி அணியும் மோதுகின்றன.
இன்று இரவு சென்னையில் 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இரு அணிகளுமே இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் உள்ளதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.
இந்நிலையில், இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரரும் விக்கெட் கீப்பருமான குயிண்டன் டி காக் ஆடமாட்டார். ஐபிஎல்லில் ஆடும் வீரர்கள், ஒரு வாரம் கட்டாயமாக குவாரண்டினில் இருக்க வேண்டும். ஆனால் குயிண்டன் டி காக் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளில் ஆடிவிட்டு அண்மையில் தான் சென்னை வந்து மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்தார்.
எனவே அவர் அவரது ஒரு வார கால குவாரண்டினை முடிக்கவில்லை என்பதால், ஆர்சிபிக்கு எதிரான முதல் போட்டியில் அவர் ஆடமுடியாது. எனவே டி காக்கிற்கு பதிலாக ஆஸி., அதிரடி வீரரான கிறிஸ் லின், ரோஹித் சர்மாவுடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரராக இறங்கவுள்ளார்.
கிறிஸ் லின் ஐபிஎல்லில் 41 போட்டிகளில் ஆடி 140.66 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் 1280 ரன்களை குவித்துள்ளார். கேகேஆர் அணிக்காக ஆடிவந்த கிறிஸ் லின்னை, 2019 ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.