துபாய்க்கு பறந்த புஜாரா, ஹனுமா விஹாரி..!
புஜாரா மற்றும் ஹனுமா விஹாரி ஆகிய இருவரும் இந்தியாவிலிருந்து புறப்பட்டு துபாய்க்கு சென்றுள்ளனர்.
ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் நிலையில், இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. நவம்பர் 10ம் தேதியுடன் ஐபிஎல் முடிவடைகிறது.
அதன்பின்னர் அங்கிருந்து நேரடியாக இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செல்கிறது. 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு செல்கிறது.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி இந்த வாரத்தில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. இந்திய வீரர்கள் அனைவரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கின்றனர். அதனால் அங்கிருந்து ஆஸ்திரேலியாவிற்கு சென்றுவிடுவார்கள்.
ஐபிஎல்லில் ஆடாத புஜாரா, ஹனுமா விஹாரி ஆகிய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவில் இருப்பதால், அவர்களும் மற்ற வீரர்களுடன் இணைந்து ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் விதமாக முன்கூட்டியே அமீரகம் செல்ல வேண்டும்.
கொரோனா நெறிமுறைகளின்படி, ஆறு நாட்கள் குவாரண்டினில் இருக்க வேண்டும், அவ்வப்போது சீரான இடைவெளியில் கொரோனா பரிசோதனைகளை செய்ய வேண்டும். ஐபிஎல்லில் இன்னும் பதினைந்து நாட்களில் முடிவடையவுள்ள நிலையில், அதன்பின்னர் அங்கிருந்து இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவிற்கு கிளம்பவுள்ளனர்.
இந்நிலையில், புஜாரா, ஹனுமா விஹாரி, இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவிலிருந்து கிளம்பி துபாய்க்கு சென்றுள்ளனர்.