#AUSvsIND இந்திய அணியின் அடுத்த லட்சுமணன் இந்த பையன் தான்..!
தற்போதைய இந்திய அணியின் விவிஎஸ் லட்சுமணன், ஹனுமா விஹாரி என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஓஜா தெரிவித்துள்ளார்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையே 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி வரும் 17ம் தேதி தொடங்கவுள்ளது. அடிலெய்டில் நடக்கும் அந்த போட்டி பகலிரவு போட்டியாக நடக்கவுள்ளது. கேப்டன் விராட் கோலி, கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடாத நிலையில், புஜாரா, ஹனுமா விஹாரி ஆகிய டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் வீரர்கள் மீதான பொறுப்பு அதிகமாகவுள்ளது.
இந்நிலையில், தற்போதைய இந்திய அணியின் லட்சுமணன், ஹனுமா விஹாரி என்று பிரக்யான் ஓஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள ஓஜா, ஹனுமா விஹாரி ஐபிஎல்லில் ஆடவில்லை; சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் ஆடவில்லை. டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் வீரராகத்தான் இருக்கிறார். அதில் நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்றாக ஆடினால், குறிப்பாக வெளிநாடுகளில் நன்றாக ஆடினால், நல்ல மரியாதை கிடைக்கும்.
இந்த தொடர் விஹாரிக்கு மிக முக்கியமான தொடர். விராட் கோலியும் இந்த தொடரில் 3 போட்டிகளில் ஆடவில்லை. கோலியின் இடத்தை ஒருவர் பூர்த்தி செய்வது கடினம். விஹாரி பயிற்சி போட்டியில் பிங்க் பந்தில் சதமடித்து அசத்தினார். பிங்க் பந்து டெஸ்ட்டில் சதமடிப்பது எளிதல்ல. விஹாரி அணியில் தொடர்ந்து நீடிக்க, அவர் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும்.
விஹாரி விவிஎஸ் லட்சுமணனை போன்றவர். லட்சுமணன் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் வீரர். எனவே அவருக்கு ஒவ்வொரு போட்டியுமே மிக முக்கியமானது. ஒவ்வொரு போட்டியிலும் அவர் ஸ்கோர் செய்தாக வேண்டும். ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் நிரந்தர இடம் இல்லாத வீரர் என்பதால், லட்சுமணன் ஒவ்வொரு போட்டியிலும் ஆடியாக வேண்டும். அதே மாதிரி தான் விஹாரியும் என்று ஓஜா தெரிவித்துள்ளார்.