என் ஊர்காரங்க கொடுத்த வரவேற்பு செம சர்ப்ரைஸா இருந்துச்சு..! அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.. நடராஜன் நெகிழ்ச்சி
ஆஸி., சுற்றுப்பயணத்தில் அசத்தி, இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்துவிட்டு சொந்த ஊர் திரும்பிய நடராஜனுக்கு, அவரது சொந்த ஊரான சின்னப்பம்பட்டி மக்கள் உற்சாக வரவேற்பளித்திருந்த நிலையில், தனது ஊர்க்காரர்களின் வரவேற்புக்கும் அவர்கள் காட்டிய அன்பு மற்றும் ஆதரவுக்கும் நடராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.
ஆஸி., சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் நெட் பவுலராக எடுக்கப்பட்டு, வருண் சக்கரவர்த்தியின் காயத்தால் டி20 அணியில் இடம்பெற்று, அதில் அருமையாக பந்துவீசி, கேப்டன் கோலியின் நன்மதிப்பை பெற்று ஒருநாள் அணியிலும் இடம்பெற்ற நடராஜன், அதிலும் அசத்தினார். பின்னர் டெஸ்ட் தொடரின்போது பும்ரா, ஷமி, உமேஷ் யாதவ் என முக்கியமான ஃபாஸ்ட் பவுலர்கள் அனைவருமே காயத்தால் வெளியேற, டெஸ்ட் அணியிலும் அறிமுகமாகி, அறிமுக இன்னிங்ஸிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் நடராஜன்.
டி20 தொடரை வென்றபோது, கோப்பையை வென்ற கேப்டன் கோலி, நடராஜனிடம் கொடுத்து அழகுபார்த்தார். அதேபோல டெஸ்ட் கோப்பையை வென்ற கேப்டன் ரஹானேவும், நடராஜனிடம் கோப்பையை கொடுத்து அவரை அங்கீகரித்து கௌரவப்படுத்தினார். ஒரே சுற்றுப்பயணத்தில் 3 விதமான போட்டிகளிலும் அறிமுகமான ஒரே இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார் நடராஜன்.
வெற்றியுடன் சாதித்து ஆஸி.,யிலிருந்து சொந்த ஊரான சேலம் மாவட்டத்தில் சின்னப்பம்பட்டிக்கு திரும்பிய நடராஜனுக்கு சின்னப்பம்பட்டி ஊர் மக்கள் மாலை அணிவித்து கொண்டாட்ட வரவேற்பளித்தனர்.
ஆஸி.,யில் இருக்கும்போது, இங்கு அவருக்கு குழந்தை பிறந்த நிலையில், ஊர் திரும்பியதும் மனைவி, குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு, பழனிக்கு சென்று மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்த நடராஜன், சொந்த ஊரில் தனக்கு உற்சாக வரவேற்பளித்த ஊர் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.