- Home
- Sports
- Sports Cricket
- IPL: 'அந்த' காரணத்தால் இந்திய அணியில் புறக்கணிப்பு.. பிசிசிஐ தேர்வுக்குழுவை விமர்சித்த முகமது ஷமி!
IPL: 'அந்த' காரணத்தால் இந்திய அணியில் புறக்கணிப்பு.. பிசிசிஐ தேர்வுக்குழுவை விமர்சித்த முகமது ஷமி!
2023 உலகக் கோப்பை தொடரில் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறவும், 2025 சாம்பியன்ஸ் டிராபியை வெல்லவும் முகமது ஷமி முக்கியப் பங்காற்றினார். ஆனால் காயம் காரணமாக சில காலம் அணியில் இருந்து விலகியிருந்தார்.

முகமது ஷமி விமர்சனம்
T20 ஃபார்மட்டில் இருந்து தன்னை தொடர்ந்து புறக்கணிப்பது குறித்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காட்டமாகப் பேசியுள்ளார். ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "கடந்த ஐந்து ஆறு வருட ஐபிஎல் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், வேறு எந்த இந்திய பந்துவீச்சாளரையும் விட நான் சிறப்பாக செயல்பட்டுள்ளேன். அப்படியிருந்தும் என்னை ஒரு T20 பவுலர் இல்லை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறியுள்ளார்.
"எப்போது விளையாட்டில் சலிப்பு ஏற்படுகிறதோ, அப்போது நானே நிறுத்திவிடுவேன். இப்போதைக்கு ஓய்வுபெறும் எண்ணம் இல்லை" என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம், தன்னை தொடர்ந்து அணியில் இருந்து புறக்கணிக்கும் பிசிசிஐ தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கருக்கு ஷமி பதிலடி கொடுத்துள்ளார்.
என் புள்ளிவிவரத்தை புகழத் தேவையில்லை
தொடர்ந்து பேசிய முகமது ஷமி, "யாரும் வந்து என் புள்ளிவிவரத்தைப் புகழத் தேவையில்லை. உங்களுக்குத் திறமை இருந்தால், ஏன் புள்ளிவிவரங்களை வைத்து அளவிட வேண்டும்? என் ஐபிஎல் ரெக்கார்டைப் பாருங்கள். கடந்த 5-6 ஆண்டுகளில் எந்த இந்திய பந்துவீச்சாளராவது என் ரெக்கார்டுக்கு அருகில் வந்திருக்கிறார்களா? ஆனாலும் நான் T20 பவுலர் இல்லை என்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளில் நான் 130 விக்கெட்டுகளை எடுத்துள்ளேன். உங்களுக்கு இன்னும் என்ன வேண்டும்?" என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
T20 ஃபார்மட்டில் வலுவாகவே இருக்கிறேன் ன்பதை சமீபத்திய போட்டிகளின் மூலம் ஷமி நிரூபித்துள்ளார். சையத் முஷ்டாக் அலி டிராபியில் வெறும் 7 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனாலும், 2026 டி20 உலகக் கோப்பை அணியில் ஹர்ஷித் ராணாவுக்குப் பதிலாக முகமது சிராஜை தேர்வுக் குழு தேர்வு செய்தது. ஷமி கடைசியாக 2025 பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிராக சர்வதேச டி20 போட்டியில் விளையாடினார்.
ஓய்வு குறித்து யோசிக்கவில்லை
ஓய்வு குறித்து இப்போதைக்கு யோசிக்கவில்லை என்று ஷமி கூறியுள்ளார். "அந்த எண்ணங்கள் நம்மை பலவீனப்படுத்தும். ஓய்வு பற்றி யோசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் அப்போதே தோற்றுவிட்டீர்கள் என்று அர்த்தம். எனக்கு அலுப்போ, சலிப்போ இல்லை. நான் விளையாட்டை ரசித்து விளையாடுகிறேன். எப்போது சலிப்பு ஏற்படுகிறதோ, அப்போது நானே நிறுத்திவிடுவேன்" என்றார்.
அணியில் இடம் கிடைக்காததற்கு பி.ஆர். ஏஜென்சிகள் இல்லாதது ஒரு காரணமா என்ற கேள்விக்கு ஷமி 'ஆம்' என்று பதிலளித்துள்ளார். "பி.ஆர். ஒரு பெரிய காரணி. பல நிறுவனங்கள் வீரர்களுக்காக இதைச் செய்கின்றன. ஆனால் எனக்கு அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை உள்ளது. யாராவது என்னை சிறிது காலம் தடுக்கலாம், ஆனால் நான் அதை பாசிட்டிவ்வாகவே பார்க்கிறேன்" என்று ஷமி கூறியுள்ளார்.
ஐபிஎல்லில் கலக்குவாரா ஷமி?
கடந்த சீசன்களில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடிய ஷமி, இந்த முறை ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பந்துவீச்சுப் பிரிவை வழிநடத்த உள்ளார். ஃபிட்னஸை மீண்டும் பெற்ற பிறகும் தன்னை புறக்கணிக்கும் பிசிசிஐ தேர்வுக் குழுவுக்கு, ஐபிஎல்-இல் தனது சிறப்பான ஆட்டம் மூலம் வலுவான பதிலை அளிக்க ஷமி தயாராகி வருகிறார்.
2023 உலகக் கோப்பை தொடரில் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறவும், 2025 சாம்பியன்ஸ் டிராபியை வெல்லவும் ஷமி முக்கியப் பங்காற்றினார். ஆனால் காயம் காரணமாக சில காலம் அணியில் இருந்து விலகியிருந்தார். முழு ஃபிட்னஸை திரும்பப் பெற்ற பிறகும் தேர்வுக் குழு அவரை புறக்கணித்தது.
தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து தொடர்கள் மற்றும் டி20 உலகக் கோப்பைக்கும் ஷமிக்கு இடம் அளிக்கப்படவில்லை. 2025-26 உள்ளூர் சீசனில் பெங்கால் அணிக்காக 67 விக்கெட்டுகளை வீழ்த்தி நல்ல ஃபார்மில் இருந்தபோதும், அஜீத் அகர்கர் தலைமையிலான குழு ஷமியை கைவிட்டது. அகர்கருக்கு எதிராக ஷமி வெளிப்படையாகப் பேசியதுதான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

