#IPL2021 அவரு ஆடாதது எங்களுக்கு மரண அடி..! ஓபனா ஒப்புக்கொண்ட சங்கக்கரா
ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆடாதது பெரும் பின்னடைவு என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட்டுக்கான இயக்குநர் குமார் சங்கக்கரா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 14வது சீசன் கடந்த 9ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக இந்த சீசனின் முதல் சில போட்டிகளில் ஆடவில்லை. ராஜஸ்தான் அணி பவுலிங்கில் ஆர்ச்சரையே அதிகமாக சார்ந்திருக்கிறது. கடந்த 2 சீசன்களில் ஆர்ச்சர் மட்டுமே அந்த அணிக்கு பவுலிங்கில் நம்பிக்கையளித்தார்.
இப்போது அவரும் ஆடாதது, அந்த அணிக்கு பெரும் பாதிப்பாக அமையும். எனினும் கடந்த சீசனில் சிறப்பாக பந்துவீசி நம்பிக்கையளித்த இளம் ஃபாஸ்ட் பவுலர் கார்த்திக் தியாகி, கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இருக்கின்றனர்.
எனினும் ஆர்ச்சர் ஆடாதது பெரும் பாதிப்புதான் என்று ராஜஸ்தான் அணியின் கிரிக்கெட்டுக்கான இயக்குநர் குமார் சங்கக்கரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள சங்கக்கரா, ஆர்ச்சர் ஆடாதது பெரிய அடி என்பதை நானும் சாம்சனும் ஒப்புக்கொள்கிறோம். ஆர்ச்சர் ராஜஸ்தான் அணியின் முக்கியமான அங்கம். துரதிர்ஷ்டவசமாக அவர் ஆடமுடியவில்லை. அவர் ஆடாததால் அதற்கேற்ப திட்டம் வகுக்க வேண்டும்.
ஆனாலும் கார்த்திக் தியாகி இருக்கிறார். கடந்த சீசனில் நன்றாக பந்துவீசினார். இந்த சீசனில் குல்தீப் யாதவ், சேத்தன் சர்காரியா ஆகியோரும் இருக்கின்றனர். எனவே அவர்களுக்கான ரோல்களை தெளிவுபடுத்தி திட்டங்களை சரியாக செயல்படுத்த வைக்க வேண்டும் என்று சங்கக்கரா கூறியுள்ளார்.