கில்கிறிஸ்ட்டுக்கு பிறகு இப்படி டெரிஃபிக்கா ஆடிய கீப்பரை நான் பார்க்கல.! ரிஷப் பண்ட்டுக்கு ஸ்ரீகாந்த் புகழாரம்
ஆஸி., முன்னாள் லெஜண்ட் விக்கெட் கீப்பரான ஆடம் கில்கிறிஸ்ட்டுக்கு பிறகு, ரிஷப் பண்ட் தான் டெரிஃபிக்காக பேட்டிங் ஆடும் விக்கெட் கீப்பர் என்று ரிஷப் பண்ட்டை புகழ்ந்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இந்திய நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, புஜாரா, ரஹானே ஆகிய சீனியர் பேட்ஸ்மேன்களே சொதப்பிய நிலையில், ரிஷப் பண்ட் அபாரமாக ஆடினார். இந்திய அணி 80 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், களத்திற்கு வந்தார். ரிஷப் பண்ட் வந்த சிறிது நேரத்திலேயே ரோஹித்தும்(49), அஷ்வினும் ஆட்டமிழக்க, 146 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்திய அணி.
அப்படியான இக்கட்டான சூழலிலிருந்து, துணிச்சலுடன் தனது வழக்கமான அதிரடி பேட்டிங்கை ஆடி சதமடித்து இந்திய அணியை காப்பாற்றினார் ரிஷப் பண்ட். முதல் அரைசதத்தை 82 பந்தில் அடித்த ரிஷப் பண்ட், அடுத்த அரைசதத்தை வெறும் 33 பந்தில் அடித்தார். 118 பந்தில் 13 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 101 ரன்களை குவித்து, ஆட்டத்தின் தலையெழுத்தையே மாற்றியது ரிஷப் பண்ட் தான்.
ஆஸ்திரேலியாவில் அபாரமாக ஆடி இந்திய அணிக்கு வெற்றி பெற்றுக்கொடுத்த ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிராகவும் அபாரமாக ஆடினார். இந்நிலையில், அவரை அடுத்த கில்கிறிஸ்ட் என்று புகழ்ந்துள்ளார் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.