#INDvsENG பகலிரவு டெஸ்ட்: முதல் விக்கெட்டை வீழ்த்திய இஷாந்த்.. முதல் பந்துலயே விக்கெட் எடுத்த அக்ஸர் படேல்..!
3வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி முதல் 2 விக்கெட்டுகளை விரைவில் இழந்துவிட்டது.
இந்தியா இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட், பகலிரவு டெஸ்ட் போட்டியாக அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஜாக் க்ராவ்லி மற்றும் டோமினிக் சிப்ளி ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக இறங்கினர். தனது 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியில் ஆடிவரும் இஷாந்த் சர்மா, முதல் ஓவரை மெய்டனாக வீச, 2வது ஓவரை பும்ராவும் மெய்டனாக வீசினார். மீண்டும் 3வது ஓவரை வீசிய இஷாந்த் சர்மா, சிப்ளியை ரன்னே அடிக்கவிடாமல் டக் அவுட்டாக்கி அனுப்பினார். சிப்ளி இஷாந்த் சர்மாவின் பந்தில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து க்ராவ்லியுடன் பேர்ஸ்டோ ஜோடி சேர்ந்தார். க்ராவ்லி, பவுண்டரிகளை அடித்து வேகமாக ஸ்கோர் செய்ய, 7வது ஓவரை தனது முதல் ஓவராக வீசிய அக்ஸர் படேலின் முதல் பந்திலேயே பேர்ஸ்டோ ஆட்டமிழந்தார். அக்ஸர் படேல் வீசிய முதல் பந்திலேயே ரன்னே அடிக்காமல் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார் பேர்ஸ்டோ. போகும்போது சும்மா போகாமல், நன்றாக அவுட் என்று தெரிந்ததற்கு தேவையில்லாமல் டி.ஆர்.எஸ் எடுத்து ஒரு ரிவியூவை வீணடித்துவிட்டு சென்றார்.