#INDvsENG சத்தியமா கோலி சொன்னதால்தான் அப்படி செய்தேன்..! இஷான் கிஷன் ஓபன் டாக்
அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்த இளம் வீரர் இஷான் கிஷன், கேப்டன் கோலி சொன்னதால்தான் பேட்டை உயர்த்தி காட்டியதாக தெரிவித்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியில் இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் அறிமுகம் ஆனார்கள். சூர்யகுமார் யாதவுக்கு பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் தொடக்க வீரராக இறங்கிய இஷான் கிஷன், அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
இங்கிலாந்து நிர்ணயித்த 165 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர் ராகுல், முதல் ஓவரிலேயே டக் அவுட்டானார். ஆனால் இஷான் கிஷன் தொடக்கம் முதலே அடித்து ஆடி அரைசதம் அடித்தார். 32 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 56 ரன்களை குவித்தார் இஷான் கிஷன். கோலி 73 ரன்கள் அடித்து, கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்திருந்தாலும், அறிமுக போட்டியிலேயே அபாரமாக ஆடி அரைசதம் அடித்த இஷான் கிஷன் தான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
போட்டிக்கு பின்னர் பேசிய இஷான் கிஷன், நான் உண்மையாகவே அரைசதம் அடிப்பேன் என நினைக்கவில்லை. விராட் பாய்(Bhai) ”டாப் இன்னிங்ஸ்” என பாராட்டிய பிறகுதான் எனக்கு நம்பிக்கை அதிகரித்தது. பொதுவாக அரைசதம் அடித்த பின், நான் பேட்டை உயர்த்தமாட்டேன். ஆனால் விராட் பாய் பேட்டை உயர்த்தி காட்டு.. இதுதான் உனது முதல் போட்டி. அனைவருக்கும் பேட்டை உயர்த்தி காட்டு என்றார். அதன்பின்னரே நான் பேட்டை உயர்த்தினேன் என்று இஷான் கிஷன் தெரிவித்தார்.