நடராஜா... இப்போதைக்கு உன்னோட குறிக்கோள் இதுவாதான் இருக்கணும்..! இர்ஃபான் பதான் அட்வைஸ்
ஃபாஸ்ட் பவுலர் டி.நடராஜனுக்கு இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதான் பயனுள்ள ஆலோசனையை வழங்கியுள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த இடது கை ஃபாஸ்ட் பவுலரான நடராஜன், ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் மிகச்சிறப்பாக பந்துவீசி, தனது துல்லியமான யார்க்கர்கள் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்ததுடன், ஆஸி., சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் நெட் பவுலராக அழைத்து செல்லப்பட்டார்.
வருண் சக்கரவர்த்தியின் காயத்தால் டி20 அணியில் இடம்பெற்று அருமையாக பந்துவீசி, கேப்டன் கோலியின் நன்மதிப்பை பெற்ற நிலையில், நவ்தீப் சைனியின் காயத்தால் ஒருநாள் அணியில் இடம்பெற்று, அபாரமாக பந்துவீசி அசத்தியதன் விளைவாக, டெஸ்ட் போட்டிகளுக்கான நெட் பவுலராக ஆஸி.,யிலேயே இருக்கவைக்கப்பட்டார் நடராஜன்.
நெட்டில் நடராஜன் அருமையாக பந்துவீசி வந்த நிலையில், ஷமி, உமேஷ் யாதவ், பும்ரா ஆகிய ஃபாஸ்ட் பவுலர்கள் காயமடைந்ததை தொடர்ந்து, கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடும் வாய்ப்பை பெற்ற நடராஜன், அறிமுக இன்னிங்ஸிலேயே முக்கியமான 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிலும் அசத்தினார். மேலும் ஒரே சுற்றுப்பயணத்தில் 3 விதமான போட்டிகளிலும் அறிமுகமான முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார் நடராஜன்.
நடராஜனுக்கு இந்திய கிரிக்கெட்டில் சிறந்த எதிர்காலம் இருப்பதை உணர முடிகிறது. முன்னாள் ஜாம்பவான்களும் அதே கருத்தைத்தான் தெரிவிக்கின்றனர். அந்தவகையில், நடராஜன் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதான், டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆட நடராஜன் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். அவரது ஆங்கிள், ரிதம் ஆகிய விஷயங்களில் நிறைய உழைக்க வேண்டும். ஒரே மாதிரியான ஆக்ஷன் அவரது பலம். ஆனால் அவர் பந்தை கையில் இருந்து வீசும்போது, அவரது உடல் இன்னும் கொஞ்சம் பின்னால் இருக்க வேண்டும். அப்படி செய்தால் தான் பந்து பேட்ஸ்மேனை நோக்கி உள்நோக்கி செல்லும்.
இன்னும் 5-7 ஆண்டுகளுக்கு இந்தியாவுக்காக ஆட வேண்டும் என்பது மட்டுமே இப்போதைக்கு நடராஜனின் குறிக்கோளாக இருக்க வேண்டும். அதற்கு அவரது ஃபிட்னெஸில் அவர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அவர் போகப்போக, இன்னும் நிறைய போட்டிகளில் ஆட ஆட பந்துவீச்சு குறித்து நிறைய கற்றுக்கொள்வார். அவரது பவுலிங்கை மேம்படுத்த அணி நிர்வாகமும் உதவும் என்று நம்புவதாக இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.