ஆஸி., கோட்டையில் கொடிநாட்டிய இந்தியா..! ஆஸி.,யின் பல்லாண்டு கால மாண்பை தகர்த்தெறிந்த தரமான சம்பவம்
பல்லாண்டுகளாக ஆஸி., அணியின் கோட்டையாக பிரிஸ்பேன் இருந்துவந்த நிலையில், அந்த மாண்பை தகர்த்தெறிந்துள்ளது இந்திய அணி.
ஆஸி.,க்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என இந்திய அணி வென்றது. தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி, ஆஸ்திரேலியாவின் கோட்டையான பிரிஸ்பேனில் நடந்தது.
பிரிஸ்பேனில் கடந்த 33 ஆண்டுகளில் ஒருமுறை ஆஸி., அணி டெஸ்ட் போட்டியில் தோற்றதில்லை என்ற சாதனையையும் பெருமையையும் தன்னகத்தே கொண்டு கெத்தாக இருந்தது. அந்த அகந்தையில் தான் இந்தியாவை எப்படியும் பிரிஸ்பேனில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றுவிடலாம் என்ற அதீத நம்பிக்கையில் இருந்தது ஆஸ்திரேலியா.
2வது இன்னிங்ஸில், கடைசி நாளில் 328 ரன்கள் என்ற கடின இலக்கை இந்தியாவிற்கு நிர்ணயித்தது, அந்த அணியின் நம்பிக்கைக்கு உரமாக அமைந்தது. ஆனால் ஷுப்மன் கில்(91) மற்றும் ரிஷப் பண்ட்(89) ஆகிய இருவரின் அபாரமான பேட்டிங்கால் 328 ரன்கள் என்ற கடின இலக்கை கடைசி நாள் ஆட்டத்தில் அடித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் வென்றது இந்திய அணி.
2018-2019 ஆஸி., சுற்றுப்பயணத்தில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை ஆஸி., மண்ணில் வென்று சாதனை படைத்த இந்திய அணி, இந்த முறையும் வென்று தொடர்ச்சியாக 2 முறை ஆஸி., மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது. டெஸ்ட் தொடரை வென்றதற்கு நிகரான தரமான சம்பவம் என்னவென்றால், பிரிஸ்பேனில் ஆஸி.,யை 33 ஆண்டுகளுக்கு பிறகு வீழ்த்தி அந்த அணியின் ஆணவத்தை அடக்கியதுதான்.