ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு ரூல்ஸா..? அவன் ரெக்கார்டை எடுத்து நல்லா பாருங்க.. தேர்வுக்குழுவை தெறிக்கவிட்ட பாஜி
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி தேர்வை கடுமையாக விமர்சித்துள்ளார் ஹர்பஜன் சிங்.
ஐபிஎல் முடிந்ததும் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இந்திய டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 அணிகளும் கடந்த 26ம் தேதி(திங்கட்கிழமை) அறிவிக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ரோஹித் சர்மாவின் புறக்கணிப்பு, வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளில் ரிஷப் பண்ட்டின் புறக்கணிப்பு, சூர்யகுமார் யாதவுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படாதது என, ஐபிஎல் விறுவிறுப்பான கட்டத்தில் இருக்கும் இந்த நேரத்தில் கூட, இந்திய அணி தேர்வு தான் ஹாட் டாபிக்காக விவாதிக்கப்பட்டுவருகிறது.
இந்திய அணி தேர்வு பாரபட்சமாக இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. உள்நாட்டு போட்டிகளில் பெரிதாக ஆடிராத, இந்த ஐபிஎல்லில் தான் ஓரளவிற்கு பந்துவீசிவரும் தமிழகத்தை சேர்ந்த வருண் சக்கரவர்த்திக்கு அதற்குள்ளாக இந்திய டி20 அணியில் வாய்ப்பளிக்கப்படுகிறது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டு போட்டிகளிலும் ஐபிஎல்லிலும் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி ஸ்கோர் செய்துவரும் சூர்யகுமார் யாதவுக்கு தொடர்ச்சியாக இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. சூர்யகுமார் யாதவின் புறக்கணிப்பு முன்னாள் ஜாம்பவான்கள், ரசிகர்களுக்கு என பல தரப்பினருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே, சையத் முஷ்டாக் அலி தொடர் என உள்நாட்டு தொடர்கள் அனைத்திலும் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்துவரும் சூர்யகுமார் யாதவ், ஐபிஎல்லிலும் ஸ்கோர் செய்கிறார்.
நடப்பு சீசனில் 10 போட்டிகளில் பேட்டிங் ஆடி, 149 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன், 2 அரைசதங்களுடன் 283 ரன்களை குவித்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ், ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சிறந்த இன்னிங்ஸை ஆடக்கூடியவர். அவரால் பல முறை அவர் சார்ந்த அணிகள் வெற்றி பெற்றிருக்கின்றன. கடந்த ஐபிஎல் சீசனில் 424 ரன்களையும், 2018 ஐபிஎல் சீசனில் 512 ரன்களையும் குவித்தார்.
இவ்வாறு தொடர்ச்சியாக சிறப்பாக ஆடும்போதிலும், சூர்யகுமார் யாதவ் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகிறார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய டி20 அணியில் அவருக்கு வாய்ப்பளிக்காததால் அதிருப்தியடைந்த ஹர்பஜன் சிங், தேர்வுக்குழுவை கடுமையாக விளாசியுள்ளார்.
இதுகுறித்த அதிருப்தியை டுவிட்டரில் வெளிப்படுத்திய ஹர்பஜன், இந்திய அணியில் இடம்பிடிக்க, சூர்யகுமார் யாதவ் இன்னும் என்னதான் செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. ஒவ்வொரு ரஞ்சி மற்றும் ஐபிஎல் சீசனிலும் அருமையாக ஆடி ஸ்கோர் செய்கிறார். வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு விதி என்று நினைக்கிறேன். சூர்யகுமார் யாதவின் ரெக்கார்டுகளை தேர்வாளர்கள் பார்க்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் என்று ஹர்பஜன் சிங் தனது அதிருப்தியை டுவிட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய டி20 அணி:
விராட் கோலி(கேப்டன்), ஷிகர் தவான், மயன்க் அகர்வால், கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர், துணை கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், சாஹல், பும்ரா, ஷமி, சைனி, தீபக் சாஹர், வருண் சக்கரவர்த்தி.