அஷ்வினுக்கு மாற்றாக இந்திய அணியில் இருக்க வேண்டியவர்! CSK வீரர் குறித்த ரகசியத்தை வெளியிட்ட முன்னாள் தேர்வாளர்
சிஎஸ்கே அணி ஐபிஎல் ஏலத்தில் எடுத்துள்ள ஆஃப் ஸ்பின் ஆல்ரவுண்டர் கிருஷ்ணப்பா கௌதமை புகழ்ந்து பேசியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் தேர்வாளர் சரண்தீப் சிங்.
கர்நாடகாவை சேர்ந்த 32 வயதான ஆஃப் ஸ்பின்னர் கிருஷ்ணப்பா கௌதமை ரூ.9.25 கோடிக்கு சிஎஸ்கே அணி, ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலத்தில் எடுத்தது. டெத் ஓவர்களில் சில பெரிய ஷாட்டுகளை ஆடக்கூடிய பேட்டிங்கும் ஆடத்தெரிந்த ஆஃப் ஸ்பின்னர் கிருஷ்ணப்பா கௌதம். அவரை மொயின் அலிக்கு(ரூ.7 கோடி) கொடுத்ததைவிட அதிக தொகைக்கு(ரூ.9.25 கோடி) ஏலத்தில் எடுத்தது சிஎஸ்கே அணி. கிருஷ்ணப்பா கௌதமிற்கு இந்த தொகை மிக அதிகம் என்ற கருத்தும் நிலவுகிறது.
இந்நிலையில், கிருஷ்ணப்பா கௌதம் தரமான ஸ்பின்னர் என்றும், அவர் இந்த தொகைக்கும் சிஎஸ்கேவின் தேர்விற்கும் தகுதியான வீரர் என்றும் இந்திய அணியின் முன்னாள் தேர்வாளர் சரண்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்போர்ட்ஸ்கீடா இணையதளத்திடம் பேசிய சரண்தீப் சிங், கிருஷ்ணப்பா கௌதம் உள்நாட்டு கிரிக்கெட்டில் நல்ல ரெக்கார்டு வைத்திருக்கிறார். உள்நாட்டு போட்டிகளில் கடந்த பல ஆண்டுகளாகவே சிறப்பாக ஆடிவருகிறார். இந்தியா ஏ அணியிலும் கடந்த 2-3 ஆண்டுகளாக சிறப்பாக ஆடி விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார். ஒரு கட்டத்தில், அஷ்வினுக்கு மாற்று வீரராகக்கூட அவரை யோசித்திருக்கிறோம்.
ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் எடுப்பது குறித்தும் பரிசீலித்திருக்கிறோம். ஆனால் குல்தீப், சாஹல், ஜடேஜா என ஸ்பின் பவுலிங் ஆப்சன் அதிகமாக இருந்ததால், கௌதமை அணியில் எடுக்க முடியாமல் போயிற்று. எனவே சிஎஸ்கே அணியால் அதிக தொகைக்கு எடுக்கப்பட்டிருக்கும் கௌதம், அதற்கு தகுதியானவரே என்று சிங் தெரிவித்துள்ளார்.