#INDvsENG இங்கிலாந்தை 205 ரன்களுக்கு பொட்டளம் கட்டிய அக்ஸர் படேல், அஷ்வின்..!
கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 205 ரன்களுக்கு சுருட்டியது இந்திய அணி.
இந்தியா இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் இன்று தொடங்கியது. காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது.
இங்கிலாந்து அணியை கடந்த போட்டியை போலவே அஷ்வினும் அக்ஸரும் சேர்ந்து சுருட்டினர். ஜாக் க்ராவ்லி மற்றும் டோமினிக் சிப்ளி ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக இறங்கினர். இன்னிங்ஸின் 6வது ஓவரை தனது முதல் ஓவராக வீசிய அக்ஸர் படேல், அந்த ஓவரின் 2வது பந்திலேயே சிப்ளியை 2 ரன்னுக்கும், தனது அடுத்த ஓவரில் க்ராவ்லியை 9 ரன்னுக்கும் என இருவரையுமே ஒற்றை இலக்கத்தில் வெளியேற்றினார் அக்ஸர் படேல்.
இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டை வெறும் 5 ரன்னுக்கு எல்பிடபிள்யூ செய்து சிராஜ் வெளியேற்ற, பேர்ஸ்டோவும் 28 ரன்னுக்கு சிராஜின் பந்தில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரும் மேட்ச் வின்னருமான பென் ஸ்டோக்ஸ், அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார். கடந்த போட்டியில் செய்த தவறிலிருந்து பாடம் கற்ற ஸ்டோக்ஸ், இந்திய ஸ்பின்னர்களை திறம்பட கையாண்டு அரைசதம் அடித்தார். ஆனால் அவரால் பெரிய இன்னிங்ஸாக மாற்ற முடியவில்லை. ஸ்டோக்ஸை 55 ரன்னில் வாஷிங்டன் சுந்தர் வீழ்த்த, ஆலி போப்(29) மற்றும் பென் ஃபோக்ஸ்(1) ஆகிய இருவரையும் அஷ்வின் வீழ்த்த, சிறப்பாக ஆடிய லாரன்ஸை 46 ரன்னில் அக்ஸர் படேல் வீழ்த்தினார்.
டோமினிக் பெஸ்ஸை 3 ரன்னில் அக்ஸர் படேலும், ஜாக் லீச்சை 7 ரன்னில் அஷ்வினும் வீழ்த்த, 205 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது இங்கிலாந்து அணி.