உனக்கு இந்த ஆஸ்திரேலிய தொடர் நல்லா அமையணும்டா தம்பி..! தாதா வாழ்த்து
தந்தையை இழந்த போதிலும், மன உறுதியுடன் நாட்டுக்காக ஆடுவதற்காக ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய ஃபாஸ்ட் பவுலர் முகமது சிராஜுக்கு இந்த தொடர் சிறப்பானதாக அமைய பிசிசிஐ தலைவர் கங்குலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் இளம் ஃபாஸ்ட் பவுலர் முகமது சிராஜ். ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணியில் அறிமுகமான சிராஜ், தற்போது ஆர்சிபி அணியில் ஆடிவருகிறார். இந்த சீசனில் கூட 9 போட்டிகளில் ஆடி 11 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆர்சிபி அணிக்காக சிறப்பான பங்காற்றினார்.
இந்திய அணிக்காக ஒரு ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடியுள்ள சிராஜ், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் இடம்பெற்று ஆஸ்திரேலியாவில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார். வரும் 27ம் தேதி முதல் ஒருநாள் போட்டி நடக்கவுள்ள நிலையில், இந்திய வீரர்களுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார்.
இந்நிலையில், முகமது சிராஜின் தந்தை முகமது கோஸ்(53) நுரையீரல் பிரச்னையால் நேற்று(வெள்ளிக்கிழமை 20ம் தேதி) காலமானார். கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதால், ஆஸ்திரேலியாவிலிருந்து உடனடியாக சிராஜால் இந்தியாவிற்கு வரமுடியாததால், ஆட்டோ ஓட்டி கஷ்டப்பட்டு தன்னை ஆளாக்கிய தந்தையின் இறுதிச்சடங்கில் சிராஜால் கலந்துகொள்ள முடியவில்லை.
இந்நிலையில், சிராஜ் இந்த பேரிழப்பிலிருந்து மீண்டுவர தேவையான மன வலிமையை பெற பிரார்த்தித்த கங்குலி, அவருக்கு இந்த ஆஸ்திரேலிய தொடர் சிறப்பானதாக அமைய வாழ்த்தும் தெரிவித்தார்.