- Home
- Sports
- Sports Cricket
- TNPL 2025 போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த புகார் – அஸ்வின், திண்டுக்கல் அணி மீது தவறு இல்லை!
TNPL 2025 போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த புகார் – அஸ்வின், திண்டுக்கல் அணி மீது தவறு இல்லை!
Ravichandran Ashwin Ball Tampering Allegations : டிஎன்பிஎல் தொடரில் பந்தை சேதப்படுத்தியதாக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, ரவிச்சந்திரன் அஸ்வின் மீது எழுந்த புகாரில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று தலைமை நிர்வாக அதிகாரி கூறியுள்ளார்.

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025
Ravichandran Ashwin Ball Tampering Allegations : ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழா போன்று தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் எனப்படும் டிஎன்பிஎல் தொடர் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில், ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியானது விளையாடிய 4 போட்டிகளில் 2ல் வெற்றியும், 2ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது. சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியானது விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்ளது.
இது ஒரு புறம் இருக்க இந்த தொடர் தொடங்கியதிலிருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். ஏற்கனவே நடுவருடன் வாக்குவாதம் செய்திருந்த நிலையில் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தது. அதோடு நடுவருடன் வாக்குவாதம் செய்ததற்காக அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
பந்தை சேதப்படுத்தியதாக ரவிச்சந்திரன் அஸ்வின் மீது புகார்
இந்த நிலையில் தான் ரவிச்சந்திரன் அஸ்வின் மீது பந்தை சேதப்படுத்தியதாக கூறி அவர் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. கடந்த 14 ஆம் தேதி சேலத்தில் 11ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், என் எஸ் சதுர்வேத் தலைமையிலான சீகம் மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதின. இதில், முதலில் விளையாடிய மதுரை பாந்தர்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்திருந்தது.
அதிகபட்சமாக ஆதிக் உர் ரஹ்மான் 50 ரன்கள் எடுத்தார். பின்னர் எளிய இலக்கை துரத்திய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியானது 12.3 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 151 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அஸ்வின் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷிவம் சிங் 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன் மூலமாக மதுரை பாந்தர்ஸ் அணியானது 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் தான் அஸ்வின் தலைமையிலான டிராகன்ஸ் அணியானது சிறப்பு துண்டுகளை பயன்படுத்தி பந்தின் நிலையை மாற்றியதாக மதுரை பாந்தர்ஸ் அணியானது குற்றம் சாட்டியது.
மதுரை பாந்தர்ஸ் அணியின் பயிற்சியாளர் ஷிஜித் சந்திரன்
இது குறித்து மதுரை பாந்தர்ஸ் அணியின் பயிற்சியாளர் ஷிஜித் சந்திரன் கூறியிருப்பதாவது: எங்களது அணி பேட்டிங் செய்யும் போது பந்தின் நிலை ரொம்பவே மோசமானது. இதன் காரணமாக பேட்ஸ்மேன்களால் சரிவர பேட்டிங் செய்ய முடியவில்லை. பவர்பிளேவிற்கு பிறகு பேட்ஸ்மேன்கள் அடித்த ஒவ்வொரு ஷாட்டும் கல்லை அடிப்பது போன்று ஒரு சத்தம் வந்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணியினர் சிறப்பு ரசாயனம் கொண்ட துண்டுகளை பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தியுள்ளனர் என்று புகார் அளித்திருந்தார். முதலில் இந்தப் புகாரானது, முதலில் தலைமை நிர்வாக அதிகாரி பூஜா தாமோதரனுக்கு அனுப்பப்பட்டது. அதன் பின்னர், TNPL க்கு அனுப்பப்பட்ட புகாரில் விளக்கமாக கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து இந்த புகார் குறித்து ஆய்வு மேற்கொண்ட டிஎன்பிஎல் தலைமை நிர்வாக அதிகாரி பிரசன்ன கண்ணன் பந்தை சேதப்படுத்தியது குறித்து எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. அதுமட்டுமின்றி அந்த துண்டுகள் இரு அணிகளுக்கும் சரி சமமாக வழங்கப்பட்டன. அதோடு அதனை TNCA கொடுத்தது என்று கண்ணன் அறிக்கையில் கூறியிருந்தார்.
போட்டியை கண்காணித்த நடுவர்கள்
அதுமட்டுமின்றி நடுவர்கள் மற்றும் போட்டி நடுவர் உட்பட கட்டுப்பாட்டுக் குழு போட்டி முழுவதும் பந்தை கண்காணித்து வந்தது. போட்டியின் போது எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி இது குறித்து எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. ஒருவேளை உரிமையாளருக்கு சரிபார்க்க கூடிய ஆதாரம் கிடைக்கும் பட்சத்தில் அவர்கள் சுயாதீன விசாரணை ஆணையத்தில் வீடியோ அல்லது புகைப்படம் உள்பட ஏதேனும் ஒரு சான்றுடன் சமர்ப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், மதுரை அணியின் உரிமையாளர்கள் ஆதாரம் கொடுக்க தவறினால், அவர்கள் TNCA நடத்தை விதிகளின் கீழ் தடைகளை எதிர்கொள்ள நேரிடும். ஆனால், போட்டி முடிந்து 24 மணி நேரத்திற்கும் மேலாக தான் மதுரை அணி புகார் அளித்தது. இது போட்டி நடைமுறையை மீறியது என்று கண்ணன் கூறினார். அதோடு தங்களது புகார் குறித்து டிஎன்சிஏ கௌரவ செயலாளருக்கு கடிதமும் அளிக்கவில்லை. ஆதலால் இந்த புகார் முதலில் ஏற்க முடியாததாக இருந்தது.
திண்டுக்கல் டிராகன்ஸ், ரவிச்சந்திரன் அஸ்வின் விடுவிப்பு
இதையடுத்து வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயத்தின் அடிப்படையில் இந்த புகார் குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டது. அதோடு இந்த புகார் தொடர்பான திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தான் இந்த குற்றச்சாட்டிலிருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விடுக்கப்பட்டதோடு, திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் விடுவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.