தனி ஒருவனாக போராடிய சாம் பில்லிங்ஸின் அபார சதம் வீண்.. இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி
முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி மான்செஸ்டரில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயன் மோர்கன், ஆஸ்திரேலியாவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னரும் கேப்டன் ஆரோன் ஃபின்ச்சும் களத்திற்கு வந்தனர். வார்னர் நிதானமாக தொடங்கி 14 பந்தில் 6 ரன்கள் அடித்த நிலையில், அவரை களத்தில் நிலைக்கவிடாமல் 4வது ஓவரிலேயே ஆர்ச்சர் கிளீன் போல்டாக்கி அனுப்பினார்.
அதன்பின்னர் ஃபின்ச்சுடன் ஜோடி சேர்ந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் அடித்து ஆட, ஃபின்ச் 16 ரன்களில் மார்க் உட்டின் பந்தில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ஸ்டோய்னிஸ் 34 பந்தில் 43 ரன்கள் அடித்து அவரும் மார்க் உட்டின் பந்தில் ஆட்டமிழந்தார்.
லபுஷேன் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகிய இருவரும் முறையே 21 மற்றும் 10 ரன்களில் அடில் ரஷீத்தின் சுழலில் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி 23.4 ஓவரில் 123 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.
இக்கட்டான நிலையில் இருந்த ஆஸ்திரேலிய அணியை மேக்ஸ்வெல்லும் மிட்செல் மார்ஷும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவிலிருந்து மீட்டெடுத்தனர்.
சிறப்பாக ஆடிய இருவருமே அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர். மிட்செல் மார்ஷ் முதலில் அரைசதத்தை எட்ட, அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய மேக்ஸ்வெல்லும் அரைசதம் அடித்தார். இருவரும் இணைந்து 20 ஓவரில் 126 ரன்களை குவித்தனர். மேக்ஸ்வெல் 59 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 77 ரன்களை குவித்து, ஆர்ச்சரின் பந்தில் ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் பாட் கம்மின்ஸ், ஆடம் ஸாம்பா ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாக, மிட்செல் மார்ஷ் மட்டும் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் 19 ரன்கள் அடித்தார். 73 ரன்கள் அடித்த மிட்செல் மார்ஷ் 47வது ஓவரில் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 294 ரன்களை குவித்து 295 ரன்கள் என்ற சவாலான இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்தது.
295 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகிய இருவரும் களத்திற்கு வந்தனர். ஜேசன் ராய் 4வது ஓவரிலேயே ஹேசில்வுட்டின் பந்தில் வெறும் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் ஜோ ரூட் ஒரு ரன்னிலும் கேப்டன் இயன் மோர்கன் 23 ரன்னிலும் ஜோஸ் பட்லர் ஒரு ரன்னிலும் என சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 16 ஓவரில் வெறும் 57 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து அணி.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் பேர்ஸ்டோ நிலைத்து நின்று நம்பிக்கையளித்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு பேர்ஸ்டோவுடன் ஜோடி சேர்ந்த சாம் பில்லிங்ஸ், அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினார். பேர்ஸ்டோ அரைசதம் அடித்து சதத்தை நெருங்கினார். ஆனால் 84 ரன்களில் ஆடம் ஸாம்பாவின் சுழலில் வீழ்ந்தார். பேர்ஸ்டோவும் பில்லிங்ஸும் இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 19 ஓவரில் 113 ரன்களை சேர்த்தனர்.
பேர்ஸ்டோ ஆட்டமிழந்தபின்னர், சாம் பில்லிங்ஸ் மட்டும் ஒருமுனையில் நிலைத்து நின்று தனி ஒருவனாக போராட, மறுமுனையில் மொயின் அலி(6), கிறிஸ் வோக்ஸ்(10), அடில் ரஷீத்(5) என சொற்ப ரன்களில் அடுத்தடுத்து வெளியேறினர்.
ஆனால் சாம் பில்லிங்ஸ் மன உறுதியையும் நம்பிக்கையையும் தளரவிடாமல் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவருக்கு மறுமுனையில் ஒத்துழைப்பு கொடுத்து யாரும் ஆடாமல் விக்கெட்டுகளை இழந்ததால் அவருக்கு நெருக்கடி அதிகரித்தது. அதனால் அவர் கடைசி வரை களத்தில் நின்றும் அவரால் இலக்கை எட்டமுடியவில்லை. இன்னிங்ஸின் கடைசி பந்தில் பில்லிங்ஸ் 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து அணி 50 ஓவரில் 275 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
3 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்திய ஜோஷ் ஹேசில்வுட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.