#AUSvsIND டெஸ்ட்: மயன்க் அகர்வாலுடன் அவரை ஓபனிங்கில் இறக்குங்க..! அணியின் பலவீனமே பலமா மாறிடும்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மயன்க் அகர்வாலுடன் தொடக்க வீரராக யாரை இறக்க வேண்டும் என்ற பெரும் விவாதம் நடந்துவரும் நிலையில், தனது கருத்தை பதிவு செய்துள்ளார் ஆஷிஸ் நெஹ்ரா.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 17ம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. அந்த போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடக்கவுள்ளது. 2வது டெஸ்ட் மெல்போர்னிலும், 3வது டெஸ்ட் சிட்னியிலும், கடைசி டெஸ்ட் பிரிஸ்பேனிலும் நடக்கவுள்ளன.
இந்த தொடரில் இந்திய அணியின் தொடக்க ஜோடி எது என்பது கேள்வியாக உள்ளது. இந்திய டெஸ்ட் அணியில் மயன்க் அகர்வால், பிரித்வி ஷா, கேஎல் ராகுல், ஷுப்மன் கில் ஆகியோர் இருப்பதால், தொடக்க ஜோடி எது என்பது பெரிய கேள்வி. மயன்க் அகர்வால் தொடக்க வீரராக இறங்குவது உறுதி. அவருடன் இறங்கப்போவது யார் என்பதுதான் பெரும் விவாதப்பொருளாக உள்ளது. முன்னாள் வீரர்கள் பலரும் இதுகுறித்த தங்களது கருத்தை தெரிவித்துவருகின்றனர்.
அந்தவகையில், இதுகுறித்து பேசிய ஆஷிஸ் நெஹ்ரா, இந்தியாவின் தொடக்க வீரராக மயன்க் அகர்வாலுடன் இறங்கப்போகும் வீரர் யார் என்பது பெரும் கேள்வியாக உள்ளது. அது யார் என்று தெரியாமல் இருப்பது பலவீனம் என்று நான் சொல்லமாட்டேன். பிரித்வி ஷா இருக்கிறார்; கில் இருக்கிறார். ஆனாலும் என்னை பொறுத்தமட்டில் கேஎல் ராகுல் தான் மயன்க் அகர்வாலுடன் தொடக்க வீரராக இறங்க வேண்டும். அவர் இருக்கும் ஃபார்முக்கு அவர் ஸ்கோர் செய்ய தொடங்கினால், பலவீனமே பலமாக மாறிவிடும்.
மயன்க் அகர்வால், கடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் 2 சிறந்த இன்னிங்ஸ்களை ஆடினார். அவருடன் ராகுல் இணைந்தால் மிகச்சிறப்பாக இருக்கும். கடந்த ஒன்றரை ஆண்டாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் ராகுல் பெரிதாக ஆடி ஸ்கோர் செய்ததில்லை. அவர் அணியிலிருந்தும் நீக்கப்பட்டார். ஆனால் இது ராகுலுக்கு மிகச்சிறந்த வாய்ப்பு என்று நெஹ்ரா தெரிவித்துள்ளார்.