#AUSAvsIND நான் பார்த்ததுலயே மிகக்கேவலமான பெர்ஃபாமன்ஸ் இதுதான்..! ஆஸி., வீரர்களை வறுத்தெடுத்த ஆலன் பார்டர்
தன் வாழ்வில் தான் பார்த்ததிலேயே படுமோசமான ஆட்டங்களில் ஆஸ்திரேலியா ஏ அணி இந்தியாவுக்கு எதிரான 3 நாள் பயிற்சி ஆட்டத்தின் 2வது நாளில் கடைசி செசனில் ஆடியதுதான் என்று ஆஸி., முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி வரும் 17ம் தேதி தொடங்குகிறது. அடிலெய்டில் நடக்கும் முதல் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடக்கவுள்ளது. அந்த போட்டிக்கு இந்திய அணி தயாராகும் விதமாக சிட்னியில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக 3 நாள் பயிற்சி போட்டியில் ஆடியது இந்திய அணி.
சிட்னியில் நடந்த இந்த போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் வெறும் 194 ரன்கள் மட்டுமே அடித்தது. பும்ரா மட்டுமே அரைசதம் அடித்தார். அவரை தவிர வேறு யாருமே அரைசதம் கூட அடிக்கவில்லை. அதைவிட மோசமாக பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா ஏ அணி, முதல் இன்னிங்ஸில் வெறும் 108 ரன்கள் மட்டுமே அடித்தது.
இதையடுத்து 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் பிரித்வி ஷா மற்றும் ரஹானேவை தவிர மற்ற அனைவருமே குறைந்தது அரைசதம் அடித்தனர். மயன்க் அகர்வால்(61), ஷுப்மன் கில்(65) ஆகியோர் அரைசதம் அடித்தனர். ஹனுமா விஹாரி மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் சதமடித்தனர். ஹனுமா விஹாரி 104 ரன்கள் நாட் அவுட் மற்றும் ரிஷப் பண்ட் 103 ரன்கள் நாட் அவுட். 2ம் நாள் ஆட்டத்தின் கடைசி செசனில் அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் 73 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்களுடன் 103 ரன்களை குவித்தார்.
ஆஸ்திரேலியா ஏ அணி பவுலர்களின் பவுலிங்கை கடைசி செசனில் ரிஷப் பண்ட் பொளந்துகட்டிவிட்டார். பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி ஒரே செசனில் ஆட்டத்தையே தலைகீழாக மாற்றிவிட்டார். முதல் இன்னிங்ஸில் வெறும் 194 ரன்கள் அடித்த இந்திய அணி, 2வது இன்னிங்ஸில் வெறும் 4 விக்கெட் இழப்பிற்கு 386 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா ஏ அணி 142 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஆனால் அதன்பின்னர் ஜோடி சேர்ந்த பென் மெக்டெர்மோத் மற்றும் ஜாக் வில்டெர்முத் ஆகிய இருவரும் சதமடித்து, அதன்பின்னர் விக்கெட்டே விழுகாமல் பார்த்துக்கொண்டதுடன், இருவரும் இணைந்து 3ம் நாள் ஆட்டத்தை முடித்ததால் பயிற்சி போட்டி டிரா ஆனது.
இந்த போட்டியில் 2ம் நாள் ஆட்டத்தின் கடைசி செசனில் ரிஷப் பண்ட் பேட்டிங் ஆடியபோது, ஆஸ்திரேலியா ஏ அணி பவுலர்கள் பந்துவீசிய விதம், ஃபீல்டிங் செய்தவிதம் என மொத்தமாக அந்த அணி ஆடிய விதமே படுமோசமாக இருந்தது என ஆஸி., முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஆலன் பார்டர், நான் பார்த்த மிக மோசமான, அலட்சியமான ஆட்டங்களில் இந்த பயிற்சி போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தின் கடைசி செசனும் ஒன்று. இது ஆஸ்திரேலியா ஏ அணி. நீங்கள் ஆஸ்திரேலியாவிற்காக ஆடுகிறீர்கள். இளம் வீரர்கள் இந்த வாய்ப்பையெல்லாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் பவுலிங், ஃபீல்டிங் பெர்ஃபாமன்ஸ் மற்றும் கேப்டன்சி என அனைத்துமே அவமானகரமாக இருந்தது என்று ஆலன் பார்டர் மிகக்கடுமையாக விளாசியுள்ளார்.