#AUSvsIND டெஸ்ட்: மிகச்சிறந்த வீரருக்கே இந்திய அணியில் இடமில்லை..!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 17ம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. அந்த போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடக்கவுள்ளது.
இந்திய டெஸ்ட் அணியில் மயன்க் அகர்வால், பிரித்வி ஷா, கேஎல் ராகுல், ஷுப்மன் கில் ஆகியோர் இருப்பதால், தொடக்க வீரர்களாக யார் யார் இறங்குவார் என்பது பெரிய கேள்விக்குறியாக இருந்துவருகிறது. மயன்க் அகர்வால் தொடக்க வீரராக இறங்குவது உறுதி. அவருடன் இறங்கப்போவது யார் என்பதுதான் கேள்வி.
கேஎல் ராகுல் மயன்க் அகர்வாலுடன் தொடக்க வீரராக இறங்குவது நல்லது என்று ஒருசில முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் பயிற்சி போட்டிகளில் பிரித்வி ஷா தான் மயன்க் அகர்வாலுடன் தொடக்க வீரராக இறங்கினார். எனவே பிரித்வி ஷா தான் தொடக்க வீரராக இறங்குவார் என்று தெரிகிறது.
கேஎல் ராகுல் இந்திய அணியின் இன்னிங்ஸை தொடங்குவதற்கான வாய்ப்பே இல்லை என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ஆகாஷ் சோப்ரா, கேஎல் ராகுல் முதல் டெஸ்ட்டில் ஆடமாட்டார். நான் இப்படி சொல்வதற்கு, ராகுல் அடித்த ஸ்கோர் குறித்த சில புள்ளிவிவரங்கள் தான் காரணம். தொடக்க வீரராக 33 டெஸ்ட் போட்டிகளில் 36 என்ற சராசரியுடன் ஆடியுள்ள ராகுல், ஐந்து சதங்கள் அடித்துள்ளார். ராகுல் மிகச்சிறந்த வீரர் தான். ஆனால் கடைசி 10 இன்னிங்ஸ்களில் மோசமாக ஆடியிருக்கிறார்; ஸ்கோரும் செய்ததில்லை. கேஎல் ராகுல் பயிற்சி போட்டியிலும் பேட்டிங் ஆடவில்லை. எனவே அதிலிருந்தே அவருக்கு அணியில் வாய்ப்பில்லை என்பது தெரிகிறது என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார்.