- Home
- Spiritual
- கணவரை இழந்த பெண்கள் பூச்சூடுவது சரியா? தவறா? போட்டுடைத்த தேசமங்கையர்கரசி.! பெண்களுக்கான முக்கிய தகவல்.!
கணவரை இழந்த பெண்கள் பூச்சூடுவது சரியா? தவறா? போட்டுடைத்த தேசமங்கையர்கரசி.! பெண்களுக்கான முக்கிய தகவல்.!
Should Women Wear Flowers After the Death of Their Husbands : கணவரை இழந்த பெண்கள் தலையில் பூச்சூடும் பழக்கத்தை கைவிடுகின்றனர். இது சரியா? தவறா? என்பது குறித்து ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி அளித்த விளக்கங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பூ வைப்பதால் ஏற்படும் நன்மைகள்
தமிழ் கலாச்சாரத்தில் பெண்கள் தலைக்கு பூச்சூடும் பழக்கம் இருந்து வருகிறது. இது உலகின் பிற நாட்டுப் பெண்களிடம் காணப்படாத தனி வழக்கமாகும். பூ வைப்பது என்பது அழகு சார்ந்த விஷயம் மட்டுமல்ல, அது அறிவியல் மற்றும் ஆரோக்கியம் சார்ந்ததும் கூட பூக்களில் இருந்து வெளிவரும் நறுமணம் மனதை அமைதிப்படுத்தும் சக்தி கொண்டது. குறிப்பாக மல்லிகை பூவின் வாசம் கோபத்தை குறைத்து, மன அழுத்தத்தை கட்டுப்படுத்தி, நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மல்லிகைப் பூவை சூடுவது மகிழ்ச்சியை அதிகரித்து புத்துணர்வைத் தரும் என்றும் கூறப்படுகிறது.
பூ வைப்பதால் ஆரோக்கியத்தில் ஏற்படும் தாக்கம்
பூக்கள் அமைதியான மற்றும் நேர்மையான உணர்வை உருவாக்குவதோடு மூளையின் பின்பகுதியில் உள்ள பினியல் சுரப்பி இடத்திற்கு இடையே வைக்கப்படுகிறது. இதனால் இந்த சுரப்பி தூண்டப்பட்டு அதன் இயக்கம் சீராக்க உதவுவதாகவும், இது ஹார்மோன் சமநிலைக்கு உதவுவதாகவும் கூறப்படுகிறது. செரோட்டனின் போன்ற மகிழ்ச்சி ஹார்மோன்கள் நன்றாக செயல்படுவதற்கும் மலர்களின் வாசனை உதவுகிறது. மேலும் பூச்சூடும் பெண்களுக்கு கூர்மையான மதிநுட்பம் இருப்பதாகவும், நல்ல தூக்கம் கிடைப்பதாகவும் ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. பூக்கள் பெண்களுக்கு இயற்கையான அழகையும், கவர்ச்சியையும் சேர்க்கின்றன.
பூ வைப்பது என்பது கலாச்சாரத்தின் அடையாளம்
தமிழ்ப் பெண்கள் தங்கள் கலாச்சார அடையாளமாகவும், நீண்ட கால பாரம்பரியத்தை பாதுகாக்கும் பொருட்டும் தலையில் பூச்சூடிக்கொள்கின்றனர். மேலும் பூச்சூடி கொள்வது மூலம் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றும், வீட்டில் செல்வமும், சுபிட்சமும் பெருகும் என்பதும் நம்பிக்கை. சில பெண்களுக்கு கணவர் இறந்த பின்னர் பூ வைக்கலாமா என்கிற சந்தேகம் இருக்கும். இதற்கு ஆன்மீகப் சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி விரிவாக விளக்கமளித்திருக்கிறார். அவர் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் பெண்கள் கணவரை இழந்த பின்னர் பூச்சூடிக்கொள்ளக்கூடாது என்பது மிகவும் தவறான கருத்தாகும் என்று கூறியுள்ளார்.
கணவர் இறந்தபின் பூ வைக்கலாமா?
இதுகுறித்து மேலும் விளக்கியுள்ள அவர், பெண்கள் பிறந்த காலம் முதலே பூ வைத்து வருகின்றனர். பூ என்பது ஒரு பெண்ணிற்கு சொந்தமானது. கணவர் இல்லை என்றால் பூ வைக்கக்கூடாது, பொட்டு வைக்கக் கூடாது என்பது அந்த காலத்தில் பெண்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதற்காக ஏற்படுத்திய வழக்கமாக இருக்கலாம். ஆனால் வாழ்க்கையில் எல்லா பெண்களும் எப்போதும் மலர்களை சூடிக்கொள்ளலாம். கணவன் வந்த பிறகு ஒரு பெண்ணுக்கு பூ வந்தது கிடையாது .அவள் பெண்ணாய் பிறந்த காலம் முதல் பூ என்பது ஒரு பெண்ணுக்கு சொந்தமானது.
அனைத்து பெண்களும் பூச்சூடி கொள்ளலாம்
வீட்டில் இருக்கும் பெண்கள் இயல்பாகவே தலை பின்னி ஒரு நாளை தொடங்கினால் அது மகிழ்ச்சியாக இருக்கும். தினசரி பூச்சூடுவதன் மூலம் மகிழ்ச்சியாக வாழலாம். சிறு வயது முதலே பெண் பிள்ளைகளுக்கு பூச்சூடும் வழக்கத்தை பயிற்றுவிக்க வேண்டியது அவசியம். நறுமணம் நிறைந்த பூக்கள் இருக்கும் இடத்தில் ஏற்படும் மன மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எனவே பெண்கள் தலைக்கு பூச்சுடுவது நல்லது. அது எந்த வயதானாலும் சரி, கணவரை இழந்த பெண்களானாலும் சரி, தாராளமாக பூச்சூடி கொள்ளலாம். இது அழகு, ஆரோக்கியம், மனநலம் என அனைத்து விளக்கங்களிலும் நன்மை பயக்கும் பழக்கமாகும்” என்று அவர் கூறியிருக்கிறார்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

