- Home
- Politics
- அண்ணன் திமுக - தம்பி அதிமுக..! சகோதரர்களை அரசியல் எதிரிகளாக மாற்றிய தொகுதி பற்றி தெரியுமா?
அண்ணன் திமுக - தம்பி அதிமுக..! சகோதரர்களை அரசியல் எதிரிகளாக மாற்றிய தொகுதி பற்றி தெரியுமா?
தேர்தலில் அண்ணன் திமுக வேட்பாளராகவும், தம்பி அதிமுக வேட்பாளராகவும் நின்று பார்த்திருக்கிறீர்களா... தமிழ்நாட்டில் உள்ள ஒரு தொகுதியில் இந்த அபூர்வ நிகழ்வு இரண்டு முறை நடைபெற்றிருக்கிறது.

Interesting Facts About Andipatti constituency
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில், தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி தொகுதியானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்து வருகிறது. 1984ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தவாரே, ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார், மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பிரச்சாரம் செய்யாமலேயே எம்ஜிஆர் அந்த தேர்தலில் வெற்றிபெற்றார். அதன்பிறகு 2002-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில், ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு தான் மூன்றாவது முறையாக முதல்வர் ஆனார் ஜெயலலிதா.
எதிர் எதிரே போட்டியிட்ட பிரதர்ஸ்
இதைத் தொடர்ந்து 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு ஜெயலலிதா வெற்றிபெற்றார். இருப்பினும் அந்த ஆண்டு அவரின் முதல்வர் கனவு நிறைவேறாமல் போனது. இவ்வாறு தமிழக அரசியல் களத்தில், உற்றுநோக்கும் தொகுதியாக கருதப்படும் ஆண்டிப்பட்டி தொகுதி, 2019ம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் மீண்டும் பரபரப்பானது. இதற்கு முக்கிய காரணம் அந்த தேர்தலில், திமுக, அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தான். அந்த தேர்தலில் திமுக, அதிமுக சார்பில் போட்டியிட்ட இருவருமே ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
ராஜன் சகோதரர்கள்
சொல்லப்போனால் அவர்கள் இருவரும் உடன்பிறந்த சகோதரர்கள் என்பது தான் அந்த தேர்தலின் சிறப்பம்சம். அதாவது திமுக சார்பில் அண்ணன் மகாராஜனும், அதிமுக சார்பில் தம்பி லோகிராஜனும் போட்டியிட்டனர். அதில் அண்ணன் மகாராஜன், 12 ஆயிரத்து 323 வாக்குகள் வித்தியாசத்தில் தனது தம்பி லோகிராஜனை தோற்கடித்தார். இதன்மூலம் அதிமுகவின் கோட்டையாக இருந்த ஆண்டிப்பட்டி, சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, திமுக வசம் வந்தது. பின்னர் 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், ஆண்டிப்பட்டி தொகுதியில் ராஜன் சகோதரர்கள் மீண்டும் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிட்டனர்.
ஹாட்ரிக் மோதல் வருமா?
அதிலும் அண்ணன் மகாராஜன் 8 ஆயிரத்து 538 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனார். 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் இருவரும் மீண்டும் போட்டியிடுவார்களா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அண்ணன் - தம்பியெல்லாம் வீட்டுல தான், கட்சியினு வந்துட்டா யார் போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து போட்டியிடுவது தான் முக்கியம் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. இந்த வருடமும் மகாராஜன் - லோகிராஜன் பிரதர்ஸ் ஆண்டிப்பட்டியில் போட்டியிடுவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

