தவெகவின் மாநிலத் தலைவர் பதவியைவிட, திமுகவின் வட்ட செயலாளர் பதவியே மேலானது..! மதிவதனி
தமிழ்நாட்டில் படித்து முனைவர் பட்டம் பெற்றவர்கள்கூட எஸ்.ஐ.ஆர் பற்றிய புரிதல் இல்லாமல் இருக்கும்போது திமுகவின் பகுதி செயலாளர்களும், வட்டச் செயலாளர்களும், கிளை செயலாளர்களும் தெருத்தெருவாக, வீதி வீதியாகப்போய் வாக்குரிமைக்காக போராடிக் கொண்டிருக்கின்றனர்

"புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சியின் மாநில பொறுப்பும், திமுகவின் வட்ட செயலாளர் பொறுப்பும் ஒன்று தான்" என திக பேச்சாளர் மதிவதனி ஒப்பிட்டுப்பேசியுள்ளார்.
திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “எதற்கு துணை முதல்வர் உதயநிதியின் பிறந்த நாளை கொண்டாடுகிறோம் என்றால் கலைஞரின் பேரன் என்பதற்காகவா? இல்லை. முதல்வரின் மகன் என்பதற்காகவா? இல்லை. துணை முதல்வர் என்பதற்காகவா? இல்லை. இளைஞர் அணி செயலாளர் என்பதற்காகவா? இல்லை. எதற்கென்றால் இவரை கொண்டாடக் கொண்டாட இணை எழுச்சியை கவர்கிறார்கள். அதனால் உதயநிதியை நாங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
முதலில் அண்ணன் உதயநிதி ஸ்டாலினை அடையாளப்படுத்தியது யார் என்று கேட்டால் திமுக கிடையாது. உதயநிதி அடையாளப்படுத்தியது தமிழ்நாட்டின் முதல்வர் கிடையாது. உதயநிதி அறிமுகப்படுத்தியது நாம் இல்லை. கருப்பு, சிவப்பு வேஷ்டி கட்டிய நம் ஆட்கள் அவரை அறிமுகப்படுத்தவில்லை. அவரை யார் அறிமுகப்படுத்தியது என்று கேட்டால், அய்யய்யோ கலைஞருடைய காலம் முடிந்து விட்டது. ஸ்டாலின் வந்தார் இவரோடு அதை முடித்து விடலாம் என்று பார்த்தார்கள். இனப்பற்று உருவாகிற வரை தலைவர்கள் உருவாவார்கள். இன்று உதயநிதியை அடையாளப்படுத்தினார்கள் இனப் பற்றாளர்கள். அதுதான் உதயநிதி வலுவான தலைவராக அறிமுகப்படுத்தியது.
யோசித்துப் பாருங்கள். நீங்கள் ஏதாவது நினைத்து புதிதாக ஆரம்பிக்கிற கட்சிக்கு, வேறு எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் போகலாம். அங்கு வகிக்கக்கூடிய மாநில பொறுப்பாக இருந்தாலும் சரி, திமுகவில் வகிக்கக்கூடிய வட்டச் செயலாளர் பொறுப்பானாலும் சரி, இரண்டும் ஒன்றுதான். நான் அடித்து சொல்கிறேன். தமிழ்நாட்டில் படித்து முனைவர் பட்டம் பெற்றவர்கள்கூட எஸ்.ஐ.ஆர் பற்றிய புரிதல் இல்லாமல் இருக்கும்பொழுது திமுகவின் பகுதி செயலாளர்களும், வட்டச் செயலாளர்களும், கிளை செயலாளர்களும் தெருத்தெருவாக, வீதி வீதியாகப் போய் வாக்குரிமைக்காக போராடிக் கொண்டிருக்கின்றனர்’’ எனத் தெரிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள தவெகவினர், ‘ ‘மதிவதனி சரியாகத்தான் சொல்கிறார். தவெகவில் ஒரு சாதாரண மனிதன்கூட மாநில பொறுப்புக்கு வரலாம். ஆனால் திமுகவில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், வரிசாக இல்லை என்றால் மாநிலப் பொறுப்புக்கு வர முடியாது. அதைத் தான் அவர் அப்படி சொல்கிறார்’’ எனக் கூறுகின்றனர்.
