Bathing Soap : ஒரே சோப்பை குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தலாமா?
குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே சோப்பை பயன்படுத்துவது சரியா? அப்படி பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

Do you share soap with family
முந்தைய காலங்களில் ஒரே குளியல் சோப்பை வீட்டில் உள்ள அனைவரும் உபயோகப்படுத்தி வந்தனர். ஆனால் அப்போது அது பெரிய விஷயமாக பார்க்கப்படவில்லை. ஆனால் தற்போதைய காலத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. எனவே குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே தங்களுக்கு பிடித்த சோப்புகளை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இது நல்ல செயல்முறையே ஆகும். ஒரே சோப்பை பலரும் உபயோகித்தால் தீமைகள் தான் அதிகமே, தவிர நன்மைகள் இல்லை. பலவிதமான சரும அமைப்பு இருப்பவர்கள் சருமத்திற்கு ஏற்ற வகையில் சோப்புகளை பயன்படுத்த வேண்டும்.
ஒரே சோப்பை பயன்படுத்துவதால் வரும் பிரச்சனைகள்
ஒரே சோப்பை பலரும் பயன்படுத்துவதால் சருமப் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். சிலர் சோப்பை உபயோகித்த பின்னர் அதன் மீது தேங்கி நிற்கும் நுரையை அப்படியே வைத்து விடுவர். இந்த நுரையில் சோப்பை பயன்படுத்தியவரின் உடலில் உள்ள பாக்டீரியாக்கள் ஒட்டிக் கொண்டிருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் சரும நோய் இருந்தாலும் அதன் பாதிப்பு இந்த நுரையில் இருக்கலாம். இதை இன்னொருவர் பயன்படுத்தும் பொழுது அந்தத் தொற்று அவருக்கும் ஏற்பட வாய்ப்பு உண்டு. நன்றாக கழுவி உலர வைத்து விட்டால் அடுத்தவர் உபயோகிக்கும் போது தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும்.
சருமப் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்
சோப்புக் கட்டிகள் ஈரப்பதத்தை இழுத்து வைத்திருக்கும் தன்மை கொண்டவை. வைரஸ், பாக்டீரியாக்கள், பங்கஸ் கிருமிகள் சோப்பின் மேல் பகுதியில் தங்கியிருக்கும். சோப்பை பலர் பயன்படுத்தும் பொழுது இந்த கிருமிகள் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவ வாய்ப்பு அதிகம். ஆரோக்கியமான சருமப் பிரச்சனைகள் இல்லாதவர்கள் உபயோகிக்கும் பொழுது சோப் மூலமாக கிருமிகள் பரவ வாய்ப்பு இல்லை. அதிக எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், நோய் தொற்றால் விரைந்து பாதிக்கப்படக் கூடியவர்கள், எக்ஸிமா போன்ற சரும நோய் உள்ளவர்கள் இடமிருந்து சோப் மூலமாக அது மற்றவர்களுக்கும் பரவக்கூடும்.
லிக்யூட் சோப் வாங்கி பயன்படுத்தலாம்
ஒருவர் உபயோகித்த சோப்பை இன்னொருவர் உபயோகிக்கும் நிலை ஏற்பட்டால், ஒருவர் உபயோகித்து முடித்த பின்னர் சோப்பை நன்கு உலர வைக்க வேண்டும். கணவன் மனைவியாக இருந்தாலும் சரி, பெற்றோர் மற்றும் குழந்தைகளாக இருந்தாலும் சரி இந்த முறையைத்தான் கடைப்பிடித்தாக வேண்டும். இந்த சோப் பிரச்சனையிலிருந்து தப்பிக்க விரும்புவர்கள் சந்தைகளில் கிடைக்கும் திரவ சோப் கரைசலை (Liquid Soap) வாங்கி பயன்படுத்தலாம். இந்த லிக்யூட் சோப் என்கிற கான்செப்ட் வந்த பிறகு தொற்றுநோய் என்கிற பேச்சுக்கே இடமில்லை. சோப்புகளை கட்டிகளாக வாங்கி பயன்படுத்துவதைக் காட்டிலும், இது போன்ற உடலை கழுவும் திரவங்களை உபயோகிக்க மருத்துவர்கள் அறிவுறுத்திருக்கின்றனர்.
மருத்துவ ஆலோசனை தேவை
சோப் என்பதே நம் உடல் புத்துணர்ச்சி பெறவும், உடலில் இருந்து அழுக்கு, தூசி, கிருமிகள், எண்ணெய்ப் படலம், வியர்வை நாற்றம் ஆகியவற்றை வெளியேற்றவும் தான். எனவே ஒருவர் உபயோகித்த சோப்பை மற்றொருவர் உபயோகிப்பதை நிறுத்தி விடுங்கள். அதேசமயம் சோப்பை உடல் முழுவதும் நீண்ட நேரம் தேய்த்து குளிப்பதும் கூடாது. அதிகபட்சம் ஐந்து நிமிடத்தில் குளித்து முடிக்க வேண்டும். முதலில் சோப்பை கைகளில் எடுத்து நன்றாக தேய்த்து நுரை வந்த பின்னர் கைகளைக் கொண்டே உடலில் தேய்க்க வேண்டும். சோப்பை நேரடியாக உடலில் மீது படும்படி தேய்க்க கூடாது. தோல் ஒவ்வாமை, முகப்பரு, வறண்ட சருமம் அல்லது வேறு ஏதேனும் சருமப் பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவ ஆலோசனைப்படி சோப்பு வாங்கி உபயோகப்படுத்தலாம்.