- Home
- Lifestyle
- Purify Water: வீட்டிலேயே குடிநீரை சுத்திகரிக்க 5 எளிய வழிகள்! கரண்ட் தேவையில்லை! காசும் வேண்டாம்!
Purify Water: வீட்டிலேயே குடிநீரை சுத்திகரிக்க 5 எளிய வழிகள்! கரண்ட் தேவையில்லை! காசும் வேண்டாம்!
Purify Water: மின்சாரமும் செலவும் இன்றி வீட்டிலேயே குடிநீரை சுத்திகரிக்க 5 எளிய வழிகள் இதோ. கொதிக்க வைத்தல், சூரிய ஒளி உள்ளிட்ட 5 வழிகள் மூலம் குடிநீரை எப்படி சுத்திகரிப்பது என விரிவாக பார்ப்போம்.

வீட்டிலேயே குடிநீரை சுத்திகரிக்க 5 எளிய வழிகள்
குடிநீர் மனிதன் ஒவ்வொருவருக்கும் அத்தியாவசிய தேவையான ஒன்று. இன்றைய நகர வாழ்க்கையில், குழாயில் வரும் தண்ணீரை அப்படியே குடிப்பது என்பது பெரும் சவாலாக மாறிவிட்டது. இரும்புச்சத்து, மண் துகள்கள், பாக்டீரியா, வைரஸ் எனப் பல அசுத்தங்கள் கலந்திருப்பதால், சுத்திகரிக்கப்படாத நீர் டைபாய்டு, காலரா, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களுக்குக் காரணமாகிறது. ஆனால், பெரிய செலவுகள் இல்லாமல், வீட்டிலேயே நம் குடிநீரைப் பாதுகாப்பானதாக மாற்ற சில எளிய வழிகள் உள்ளன.
கொதிக்க வைத்தல் - மிக எளிய, நம்பகமான வழி
குடிநீரை சுத்திகரிக்க மிகவும் பழமையான மற்றும் நம்பகமான முறை, அதை நன்றாகக் கொதிக்க வைப்பதுதான். தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, 3 முதல் 5 நிமிடங்கள் வரை நன்கு கொதிக்க வைத்தால், அதில் உள்ள பெரும்பாலான பாக்டீரியாக்களும் வைரஸ்களும் அழிந்துவிடும். கொதிக்க வைத்த நீரை, சுத்தமான, மூடிய பாத்திரத்தில் சேமித்து, ஆறிய பிறகு குடிப்பது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது.
தண்ணீரில் மண் போன்ற பெரிய துகள்கள் இருந்தால், கொதிக்க வைப்பதற்கு முன்பு ஒரு சுத்தமான பருத்தித் துணியில் வடிகட்டிக் கொள்ளலாம். இது நீரின் தரத்தை மேலும் மேம்படுத்தும். சுத்திகரிக்கப்பட்ட நீரை எடுக்கும்போது, கைகளைப் பயன்படுத்தாமல் சுத்தமான கரண்டியைப் பயன்படுத்துவது அவசியம்.
இதையும் படிங்க: Fridge Cleaning: ஃப்ரிட்ஜில் ஐஸ் மலைபோல் சேர்கிறதா? எளிய முறையில் அகற்ற சூப்பர் டிப்ஸ்!
செலவே இல்லாத இயற்கை முறைகள்
மின்சாரம் அல்லது பிற வசதிகள் இல்லாத சூழலில், சூரிய ஒளியே ஒரு சிறந்த சுத்திகரிப்பானாகச் செயல்படும். வெளிப்படையான பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி பாட்டிலில் தண்ணீரை நிரப்பி, சுமார் 6 மணி நேரம் நேரடி வெயிலில் வைக்கும்போது, சூரியனின் புற ஊதாக் கதிர்கள் நீரில் உள்ள சில கிருமிகளைச் செயலிழக்கச் செய்கின்றன. இது ஒரு அவசரகாலத்திற்கு ஏற்ற அருமையான முறை.
நம் பாட்டி காலத்தில் இருந்தே புழக்கத்தில் இருக்கும் மண்பானை, வெறும் தண்ணீரை குளிர்ச்சியாக வைப்பதற்கு மட்டுமல்ல. மண்பானையின் நுண்துளைகள், நீரில் உள்ள சில அசுத்தங்களை இயற்கையாக வடிகட்டி, நீருக்கு ஒரு தனித்துவமான சுவையையும் கொடுக்கிறது. பழசுதான், ஆனால் இன்னைக்கும் இது ஒரு சிறந்த டெக்னிக்தான்.
இதையும் படிங்க: Mutton: மட்டன் வேகலையா? இந்த ஒரு ஸ்பூன் மேஜிக் பொருளை மட்டும் சேர்த்து பாருங்க!
காய்ச்சி வடித்தல் மற்றும் கரி வடிகட்டி
கொஞ்சம் மெனக்கெட்டால், வீட்டிலேயே காய்ச்சி வடித்தல் (Distillation) மூலம் நீரை மிகவும் தூய்மையாக மாற்ற முடியும். ஒரு பெரிய பாத்திரத்தில் நீரை நிரப்பி, அதன் நடுவில் ஒரு சிறிய காலிப் பாத்திரத்தை வைத்து, தலைகீழாக மூடி 20-30 நிமிடங்கள் கொதிக்க வைத்தால், நீராவி குளிர்ந்து சொட்டுச் சொட்டாக தூய்மையான நீராக சிறிய பாத்திரத்தில் சேகரமாகும். இந்த முறையில் கிடைக்கும் நீர், கனிமங்கள் மற்றும் அசுத்தங்கள் பெருமளவில் நீக்கப்பட்டதாக இருக்கும்.
சில பாரம்பரிய முறைகளில், மணல், சிறு கற்கள் மற்றும் இயற்கை கரியைப் பயன்படுத்தி வடிகட்டிகள் உருவாக்கப்படுகின்றன. கரி, நீரில் உள்ள துர்நாற்றம் மற்றும் சில ரசாயனங்களை உறிஞ்சும் தன்மை கொண்டது. இருப்பினும், இந்த முறைகளுக்குப் பிறகும் தண்ணீரை ஒருமுறை கொதிக்க வைத்துக் குடிப்பதே முழுமையான பாதுகாப்பைத் தரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

