முடிஞ்சா இந்த இலக்கை அடிங்க.. சிஎஸ்கேவிற்கு சவாலான இலக்கை நிர்ணயித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப்
சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் 20 ஓவரில் 178 ரன்களை குவித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
சிஎஸ்கே மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி துபாயில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் ராகுலும் மயன்க் அகர்வாலும், இந்த சீசனில் இதற்கு முந்தைய போட்டிகளில் ஆடியதை போலவே இந்த போட்டியிலும் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.
மயன்க் அகர்வால் அதிரடியாக தொடங்க, ராகுல் நிதானமாக ஆடினார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 8 ஓவரில் 61 ரன்கள் அடித்தனர். மயன்க் அகர்வால் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த மந்தீப் சிங், வந்தது முதலே அடித்து ஆடினார். 16 பந்தில் 2 சிக்ஸர்களுடன் 27 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் களத்திற்கு வந்த நிகோலஸ் பூரானும் 17 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 33 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்த ராகுல், 52 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 63 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, டெத் ஓவர்களில் புதிதாக களத்திற்கு வந்த மேக்ஸ்வெல் மற்றும் சர்ஃபராஸ் கானால் பெரியளவில் ஷாட்டுகளை அடிக்கமுடியவில்லை என்றாலும், ஓரளவிற்கு சில பவுண்டரிகளை அடித்து 20 ஓவரில் 178 ரன்களை அடிக்க உதவினர்.
179 ரன்கள் என்ற இலக்கை சிஎஸ்கேவிற்கு நிர்ணயித்துள்ளது பஞ்சாப் அணி. இரு அணிகளுமே இதற்கு முன் ஆடிய 4 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளதால், இரு அணிகளுமே 2வது வெற்றியை பெறும் முனைப்பில் களமிறங்கியுள்ள நிலையில், 179 என்பது துபாய் மைதானத்தில் சவாலான இலக்கே. எளிதான இலக்கும் அல்ல; அதேவேளையில் கடினமான இலக்கும் அல்ல.