ஐபிஎல் 2020: தப்பு பண்ணிட்டேன்.. தோனி வருத்தம்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், தான் பேட்டிங் ஆடிய விதம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார் சிஎஸ்கே கேப்டன் தோனி.
ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. இந்த சீசன் சிஎஸ்கே அணிக்கும் கேப்டன் தோனிக்கும் நல்ல தொடக்கமாக அமையவில்லை.
சிஎஸ்கே அணி இந்த சீசனில் இதுவரை ஆடிய 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று, 3 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள நிலையில், இன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை எதிர்கொள்கிறது.
சிஎஸ்கே அணியின் பேட்டிங் படுமோசமாக இருக்கிறது. பேட்ஸ்மேன்கள் இன்னும் சரியான ரிதமுக்கு திரும்பாதது சிஎஸ்கேவிற்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. டுப்ளெசிஸை தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடுவதில்லை.
சன்ரைசர்ஸுக்கு எதிரான கடந்த போட்டியிலும் பேட்டிங் சொதப்பல் தொடர்ந்தது. 42 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்ட சிஎஸ்கே அணியை தோனியும் ஜடேஜாவும் சேர்ந்து கரைசேர்க்க முயன்றனர். ஆனால் அவர்கள் மிடில் ஓவர்களில் படுமந்தமாக ஆடிவிட்டதால் கடைசியில் இலக்கை விரட்ட முடியாமல் போனது. 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது சிஎஸ்கே.
7வது ஓவரிலேயே களத்திற்கு வந்த தோனி, கடைசி வரை களத்தில் நின்றும் இலக்கை விரட்ட முடியவில்லை. ஐக்கிய அரபு அமீரகத்தின் சீதோஷ்ண நிலையை எதிர்கொண்டு ஆட, இளம் வீரர்களே திணறும் நிலையில், 39 வயதான தோனி, முதல் இன்னிங்ஸில் 20 ஓவர்கள் விக்கெட் கீப்பிங் செய்துவிட்டு, பேட்டிங்கிலும் 13 ஓவர்கள் களத்தில் நிலைத்து நின்று ஆடினார்.
ஆனாலும் கடும் களைப்படைந்த தோனியால், கடைசியில் அவர் எதிர்பார்த்ததை போல பெரிய ஷாட்டுகளை எளிதாக ஆடமுடியவில்லை. பேட்டிங் ஆடும்போது களத்தில் தோனி சிரமப்பட்டதை கண்டு ரசிகர்களே கலங்கினர். ஆனாலும் போராட்ட குணம் கொண்ட தோனி, கடைசிவரை தளராமல் போராடினார்.
இதுபோன்ற பல கடினமான போட்டிகளில் கடைசி வரை களத்தில் நின்று, டெத் ஓவர்களில் சிக்ஸர்களை விளாசி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்துள்ளார் தோனி. சில முறை அது முடியாமல் போகும். அப்படியான சில சமயங்களில் சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியும் ஒன்றாகிவிட்டது. அதற்கு ஐக்கிய அரபு அமீரக கண்டிஷனும், தோனி பழைய தோனி இல்லை என்பதும் முக்கியமான காரணங்கள்.
ஆனால் போட்டிக்கு பின்னர் பேசிய தோனி, பந்தை ஓங்கி அடிக்க முயற்சி செய்யாமல், டைமிங் செய்திருக்க வேண்டும் என்றும் தான் தவறு செய்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
அதுகுறித்து பேசிய தோனி, நிறைய பந்துகளை என்னால் சரியாக அடிக்க முடியவில்லை. ஓங்கி அடிக்க முயற்சி செய்தேன். ஆனால் பிட்ச் ஸ்லோவானதால், நான் ஓங்கி அடிக்க முயற்சி செய்யாமல், டைமிங் செய்திருக்க வேண்டும். அதைவிடுத்து ஓங்கி அடிக்க முயற்சி செய்தது தவறு. ஐக்கிய அரபு அமீரகத்தின் சீதோஷ்ண நிலையால், தொண்டை வறண்டுவிட்டதால், இருமல் வந்துவிட்டது. நீண்ட காலத்திற்கு பிறகு, தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோற்றுள்ளோம். சில விஷயங்களை சரி செய்ய வேண்டியிருக்கிறது என்று தோனி தெரிவித்தார்.