வெளில வந்த சீக்ரெட்! நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த டோஸ்!
நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ரூ.500 நோட்டுகள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அவரது நடத்தை குறித்து கடும் கவலை தெரிவித்துள்ளனர். தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கு
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட தீ விபத்தில், பாதி எரிந்த நிலையில் மூட்டை மூட்டையாக ரூ.500 நோட்டுகள் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அவரது நடத்தை குறித்து கடும் கவலை தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் நள்ளிரவில் நீதிபதி வர்மாவின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டபோது, தீயணைப்புப் படையினர் அணைத்தபின், ஒரு அறையில் மூட்டை மூட்டையாக ரூ.500 நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை அமைத்தது. இந்த உள் விசாரணையின் சட்டப்பூர்வ செல்லுபடியை எதிர்த்து நீதிபதி யஷ்வந்த் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவலை
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஏ.ஜி. மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதி வர்மாவின் வழக்கறிஞர் கபில் சிபல் தனது வாதங்களை முன்வைத்தார். அவர், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய விசாரணை குழு பரிந்துரைத்திருப்பது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று வாதிட்டார்.
அப்போது, நீதிபதி வர்மாவின் நடத்தை குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். நீதிபதி வர்மாவிடம், அவர் ஏன் உள் விசாரணைக் குழுவின் முன் ஆஜராகி, அவ்வப்போது அதை எதிர்க்கவில்லை எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், உள் விசாரணைக் குழுவின் அறிக்கையை எதிர்த்து நீதிபதி வர்மா முன்னதாகவே உச்ச நீதிமன்றத்திற்கு வந்திருக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
மேலும், "உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஒன்றும் தபால் நிலையம் அல்ல. நீதித்துறையின் தலைவர் என்ற முறையில் அவருக்கு நாட்டிற்கான கடமைகள் இருக்கின்றன. தவறான நடத்தை தொடர்பான விவகாரங்கள் வரும்போது அவற்றை குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு அனுப்ப வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது" என்று குறிப்பிட்டனர்.
நம்பிக்கை ஏற்படவில்லை
"நீங்கள் ஏற்கனவே முடிவு எடுத்துவிட்டதாக" யஷ்வந்த் வர்மா தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் கூற, அதற்கு நீதிபதி தத்தா, "நாங்கள் ஏற்கனவே முடிவை எடுத்திருந்தால் நாங்கள் அமைதியாக இருந்து உங்களை வாதிட அனுமதித்திருப்போம். தீர்ப்பினையும் வழங்கியிருப்போம். ஆனால் அது நியாயமான நீதி அல்ல. அதனால்தான் நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம். சட்டத்தை நாங்கள் பின்பற்ற வேண்டும்" என்று கூறினார்.
மேலும், "நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நடத்தை மீது நம்பிக்கை ஏற்படவில்லை. உங்கள் நடத்தை பலவற்றை சொல்கிறது. நீங்கள் ஒன்றைக் கண்டுபிடிக்க காத்திருந்து அது கிடைத்தவுடன் இங்கு வந்திருக்கிறீர்கள். நீதிபதி பதவியில் நீடிக்க வேண்டுமா என்பதை நாடாளுமன்றம் முடிவு செய்யட்டும்" என்று கூறி வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.