தெருநாய்க்கு பிரியாணி.. புருஷனுக்கு பட்டினி.. விரக்தியில் கணவர் எடுத்த முடிவு!
குஜராத்தில், தனது மனைவி தெருநாய்கள் மீது காட்டிய அதீத பாசத்தால், தன்னை கவனிக்கத் தவறியதாகக் கூறி கணவர் ஒருவர் விவாகரத்து கோரியுள்ளார். நாய்களுக்கு பிரியாணி சமைத்து கொடுத்து, தன்னை பட்டினி போட்டதாகவும் கணவர் குமுறுகிறார்.

விநோத விவகாரத்து வழக்கு
குஜராத்தில் 41 வயதான ஒருவர், தனது மனைவியின் எல்லைமீறிய செல்லப்பிராணி பாசத்தால் ஏற்பட்ட கொடுமைகளைத் தாங்க முடியாமல், உடனடியாக விவாகரத்து வழங்கக் கோரி குடும்பநல நீதிமன்றத்தில் கண்ணீருடன் முறையிட்டுள்ளார்.
கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதிக்கு இடையே, மனைவி தெருநாய்களை வளர்ப்பதில் காட்டிய அதீத அக்கறை காரணமாக 2007-ம் ஆண்டிலேயே விரிசல் ஏற்பட்டுள்ளது.
கணவனுக்கு சமைக்காமல் நாய்களுக்கு ‘பிரியாணி’
திருமணம் முடிந்த சில நாட்களிலேயே, மனைவி ஒரு தெருநாயை வீட்டிற்கு அழைத்து வந்து வளர்க்க ஆரம்பித்தார். அவர் வசித்து வந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் அக்கம் பக்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தபோதும் அதைக் கண்டுகொள்ளவில்லை. அவர் தொடர்ந்து தெருவில் திரியும் பல நாய்களை வீட்டுக்கு எடுத்து வந்து பராமரித்தார்.
தனது கணவருக்கு சமையல் செய்து கொடுத்தாரோ இல்லையோ, அந்தத் தெரு நாய்களுக்காக விதவிதமான உணவுகளைச் சமைத்துப் போட்டார். மேலும், அந்த நாய்களை மிகவும் கவனமாகப் பராமரித்துள்ளார்.
இரவு நேரங்களில் தன் அருகில் தூங்குவதைவிட, அந்த நாய்களுடன்தான் அவர் அதிக நேரம் தூங்கினார் என்றும், மனைவியின் இந்தச் செயல் தனக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியதாகவும் கணவர் தனது மனுவில் கூறியுள்ளார்.
பெங்களூருக்குத் தப்பி ஓடிய கணவர்
மனைவியின் இந்தச் செயலால் கணவர் மன உளைச்சலுக்கு ஆளானார். அக்கம் பக்கத்தினர் அந்தப் பெண் மீது போலீசில் புகார் அளித்தபோதும், அவர் விலங்குகள் நல வாரியத்தில் உறுப்பினராகச் சேர்ந்து, பொதுமக்கள் மீது குற்றம் சாட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால் அவமானமாக உணர்ந்த கணவர், கடந்த 2007-ம் ஆண்டு பெங்களூருக்குத் தப்பி ஓடினார். அதற்குப் பின்பும், மனைவி தொடர்ந்து தொந்தரவு செய்ததாகவும், தெரு நாய்களைத் திருமணம் செய்துகொண்டது போன்ற புகைப்படங்களைக் காட்டி தன்னை வெறுப்பேற்றியதாகவும் அவர் நீதிமன்றத்தில் புலம்பியுள்ளார்.
இதன் காரணமாகத் தான் மன அழுத்தத்தால் தனது ஆண்மையை இழந்து விட்டதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
ரூ.2 கோடி ஜீவனாம்சம் கேட்கும் மனைவி
மனைவியின் இந்த விசித்திரமான வாழ்க்கை முறையால் இனி குடும்பம் நடத்த முடியாது என்று முடிவெடுத்த கணவர், தனக்கு விவாகரத்து வழங்கக் கோரி அகமதாபாத் குடும்பநல நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.
கணவர், தனது மனைவிக்கு ரூ.15 லட்சம் ஜீவனாம்சம் கொடுக்கத் தயார் எனத் தெரிவித்துள்ளார். ஆனால், அவரது மனைவியோ, கணவரின் குடும்பத்தினர் வெளிநாட்டில் விடுதிகள் (Resorts) நடத்தி வருவதால் தனக்கு ரூ.2 கோடி ஜீவனாம்சம் வேண்டும் என எதிர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு டிசம்பர் 1-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. மனைவியின் தெருநாய் பாசத்தால் குடும்ப உறவில் ஏற்பட்ட இந்த விரிசல், நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.