ஆதார் கார்டு கட்டணம் திடீர் உயர்வு! விலை ஏறிய பிளாஸ்டிக் ஆதார்.. UIDAI அறிவிப்பு
ஆதார் PVC கார்டுகளுக்கான சேவைக் கட்டணத்தை UIDAI ரூ. 50-லிருந்து ரூ. 75 ஆக உயர்த்தியுள்ளது. செயல்பாட்டுச் செலவுகள் அதிகரித்ததே இதற்குக் காரணம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டணத்தில் ஜிஎஸ்டி மற்றும் தபால் செலவுகளும் அடங்கும்.

ஆதார் கட்டண உயர்வு
ஆதார் ஆணையம் (UIDAI), பிளாஸ்டிக் ஆதார் கார்டு எனப்படும் Aadhaar PVC கார்டுகளைப் பெறுவதற்கான சேவைப் பிரிவில் அதிரடி மாற்றத்தைச் செய்துள்ளது.
2020-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சேவையின் கட்டணம், தற்போது முதன்முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.
முக்கிய மாற்றங்கள் என்ன?
இதுவரை ரூ. 50 ஆக இருந்த சேவைக்கட்டணம், தற்போது ரூ. 75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் 2026, ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த 75 ரூபாயில் ஜிஎஸ்டி (GST) மற்றும் தபால் மூலம் வீட்டிற்கு அனுப்பும் செலவும் (Speed Post charges) அடங்கும்.
விலை உயர்வுக்கான காரணம் என்ன?
UIDAI வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த சில ஆண்டுகளில் பிளாஸ்டிக் கார்டுகளைத் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் விலை, அச்சிடும் செலவு மற்றும் பாதுகாப்பான டெலிவரி உள்ளிட்ட விநியோகச் செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளன. உயர்தரமான சேவையைத் தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்யவும், செயல்பாட்டுச் செலவுகளை ஈடுகட்டவும் இந்தக் கட்டண உயர்வு அவசியமாகிறது என்று ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
புதிய கட்டணத்தின் அடிப்படையில், myAadhaar இணையதளம் அல்லது mAadhaar மொபைல் செயலி வாயிலாக PVC கார்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆதார் PVC கார்டின் சிறப்பம்சங்கள்
காகித அட்டைகளை விட இது உறுதியானது மற்றும் நீண்ட காலம் சேதமடையாமல் இருக்கும். இதில் க்யூஆர் கோட் (QR Code), நுண் எழுத்துக்கள் (Micro text) போன்ற கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.
இது ஏடிஎம் கார்டு போன்ற அளவில் இருப்பதால், மணிப்பர்ஸில் (Wallet) எளிதாக எடுத்துச் செல்ல முடியும். சாதாரண ஆதார் கடிதம் அல்லது இ-ஆதார் (e-Aadhaar) ஆவணங்களுக்கு இருக்கும் அதே மதிப்பு இதற்கும் உண்டு.
2020-இல் ஆதார் PVC கார்டு அறிமுகமானது. அதிலிருந்து இதற்கான கட்டணம் மாற்றப்படாமல் இருந்த நிலையில், தற்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

