டிராகன் விண்கலத்தில் பூமிக்குப் புறப்பட்டார் சுபான்ஷு சுக்லா!
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா நாளை (செவ்வாய்க்கிழமை) பூமிக்குத் திரும்ப உள்ளார். ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக உள்ளது.

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, நாளை (செவ்வாய்க்கிழமை) பூமிக்குத் திரும்பத் தயாராகி வருகிறார். அவர் பயணிக்கும் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருந்து புறப்பட ஆயத்தமாகியுள்ளது. சுக்லா தனது சக விண்வெளி வீரர்களுடன் விண்கலத்திற்குள் பாதுகாப்பாக நுழைந்தவுடன், விண்கலத்தின் கதவு மூடப்பட்டது.
சுக்லாவும் அவரது குழுவினரும் விண்கலத்திற்குள் அமர்ந்த பின்னர், விண்வெளி நிலையத்தின் அழுத்தம் குறைக்கும் செயல்முறை (depressurisation process) தொடங்கப்பட்டுள்ளது. இந்த செயல்முறை பொதுவாக ஒரு மணிநேரம் நீடிக்கும். விண்கலம் விண்வெளி நிலையத்தில் இருந்து விடுவிக்கப்படுவதற்கு முன், ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் நாசா இரண்டும் வாக்கெடுப்பு நடத்தி இறுதி முடிவு அறிவிக்கப்படும். இந்திய நேரப்படி மாலை 4:30 மணியளவில் அதற்கான கட்டளை வழங்கப்படும்.
கட்டளை வழங்கப்பட்டவுடன், டிராகன் விண்கலத்திற்கும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கும் இடையில் தரவுகளை வழங்கும் இணைப்புகள் (umbilicals) விடுவிக்கப்பட்டு, டிராகன் விண்கலம் அதன் பிடிப்பு கொக்கியை (capture hook) துண்டிக்கும். இது நடப்பதற்கு சுமார் நான்கு நிமிடங்கள் ஆகும். அதன் பிறகு, டிராகன் தனது உந்துவிசைகளை (thrusters) இயக்கத் தொடங்கும்.
ஆக்ஸியம் ஸ்பேஸ் (Axiom Space) நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்படி, குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சரியாக மாலை 4:35 மணிக்கு (இந்திய நேரம்) துண்டிக்கப்படுவார்கள். பிறகு, சுமார் 22.5 மணிநேரம் கழித்து, அதாவது செவ்வாய்க்கிழமை மாலை 3:01 மணிக்கு (இந்திய நேரம்), கலிஃபோர்னியா கடற்கரை அருகே விண்கலம் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே டிராகன் விண்கலம் 580 பவுண்டுகளுக்கும் அதிகமான பொருட்களை சுமந்து வரும் என்று நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. இதில் நாசாவின் உபகரணங்கள் மற்றும் திட்டத்தின்போது நடத்தப்பட்ட 60 க்கும் மேற்பட்ட சோதனைகளில் இருந்து பெறப்பட்ட மதிப்புமிக்க தரவுகளும் அடங்கும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.