- Home
- இந்தியா
- இந்தியாவின் முதல் தானியங்கி துறைமுகம்! விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்!
இந்தியாவின் முதல் தானியங்கி துறைமுகம்! விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்!
கேரளாவின் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

PM Modi to inaugurate Vizhinjam port: கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சத்தில் புதிதாக சர்வதேச துறைமுகம் கட்டப்பட்டுள்ளது. அதானி குழுமத்துடன் இணைந்து கட்டப்பட்டுள்ள இந்த துறைமுகம் நாட்டின் முதல் சர்வதேச தானியங்கி துறைமுகம் ஆகும். ரூ.8.827 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்த துறைமுகம் கடந்த ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்த நிலையில், பல்வேறு நாடுகளில் இருந்து சரக்கு கப்பல்கள் சென்று சோதனை ஓட்டம் நடந்து கொண்டிருந்தது.
vizhinjam port, PM Modi
விழிஞ்சம் துறைமுகம்
இந்நிலையில், விழிஞ்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள துறைமுகத்தை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதற்காக நேற்று தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த பிரதமர் மோடி ஆளுநர் மாளிகையில் தங்கினார். இன்று (மே 2) காலை 11 மணியளவில் விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
கவர்னர் மாளிகையில் இருந்து விமான நிலையத்துக்கு காரில் செல்லும் பிரதமர் மோடி அங்கு இருந்து ஹெலிகாப்டரில் விழிஞ்சம் சென்று விழாவில் பங்கேற்கிறார். இந்த விழாவில் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சார்பானந்த சோனாவால், கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.
vizhinjam port, kerala
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
பிரதமர் மோடி வருகையையொட்டி விழிஞ்சம் மற்றும் திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் திருவனந்தபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை 10.00 மணி முதல் மே 2 ஆம் தேதி விழா முடியும் வரை போக்குவரத்து மாற்றம் இருக்கும்.
மே 2 ஆம் தேதி, காலை 6.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை, கௌடியார்-பாளையம்-ஆல்தாரா-திருவனந்தபுரம் கிளப்-பிஎம்ஜி-பாங்கோடு ராணுவ முகாம்-பள்ளிமுக்கு வழித்தடத்தில் வாகன நிறுத்தம் அனுமதிக்கப்படாது. ஸ்ரீகாரியம்-வெள்ளையம்பலம், பாபனம்கோடு, கிள்ளிப்பாலம்-ஈஞ்சக்கல்-அனையாரா மருத்துவக் கல்லூரி-ஈஞ்சக்கல்-சக்கை-SKP சாலை-திருவல்லம் பூங்கா-கரகுளம் கோயில்-சூழாத்துக்கோட்டா-கரமணா மேம்பாலம்-ஃப்ளோரி சந்திப்பு-வழுதகாடு-பாளையம் திருவல்லத்திலிருந்து கும்மிச்சந்த-கிள்ளிப்பாலம்-சக்கை-ஆலப்பாஸ் சந்திப்பு-ஸ்ரீகாரியம் வரை போக்குவரத்து தடை செய்யப்படும்.
vizhinjam port, Trivandrum
போக்குவரத்து மாற்றம்
திருவனந்தபுரம் விமான நிலைய உள்நாட்டு முனையத்திற்குச் செல்வோர் பெட்டா-சக்காய் மேம்பாலம்-ஈஞ்சக்கல்-கிள்ளிபாலம்-பாபனம்கோடு-வெள்ளையம்பலம் வழித்தடத்தைப் பயன்படுத்த வேண்டும். சர்வதேச முனையத்திற்குச் செல்லும் பயணிகள் பெட்டா-சக்காய் மேம்பாலம்-ஈஞ்சக்கல்-கிள்ளிபாலம்-அனையாரா மருத்துவக் கல்லூரி சேவை சாலை வழித்தடத்தைப் பயன்படுத்த வேண்டும்.
பிரதமர் செல்லும் பாதையை ஒட்டிய சாலைகளிலும் தற்காலிக மாற்றுப்பாதைகள் இருக்கும். தடைசெய்யப்பட்ட நேரங்களில் பயணிகள் காவல்துறையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும், இந்தப் பாதைகளில் தேவையற்ற பயணத்தைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். தடைசெய்யப்பட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீட்பு வாகனங்கள் மூலம் அகற்றப்படும், மேலும் மீறுபவர்கள் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று போலீஸ் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.