சஞ்சய் காந்தி முதல் பிபின் ராவத் வரை.. இந்திய அரசியலை உலுக்கிய விமான விபத்து மரணங்கள்
அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் பெரும் விபத்துக்குள்ளானது. இதற்கு முன்பாக இந்தியாவில் விமான விபத்தில் இறந்த அரசியல் பிரபலங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஹோமி பாபா (1966)
இந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தையாக போற்றப்படுபவர் ஹோமி பாபா. இந்திய அறிவியல் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. அவர் 1966 ஆம் ஆண்டு ஜெனீவாவில் ஒரு மாநாட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, பிரான்சின் மான்ட் பிளாங் மறைப்பகுதியில் அவரது விமானம் விபத்துக்குள்ளானது. இந்தியா அணுசக்தி நாடாக மாறுவதை விரும்பாத உலக நாடுகளின் சதி காரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது.
மோகன் குமாரமங்கலம் (1973)
மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த பி.சுப்பராயனின் மகனான இவர், காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக இருந்தார். 1973 ஆம் ஆண்டு டெல்லியில் இந்தியன் ஏர்லைன்ஸ் 440 விமானத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். இவர் பயன்படுத்திய பார்க்கர் பேனா, காதில் அணியும் கருவி மூலம் இவரது உடல் அடையாளம் காணப்பட்டது.
சஞ்சய் காந்தி (1980)
இந்திரா காந்திக்குப் பிறகு மிகப்பெரிய தலைவராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட சஞ்சய் காந்தி, ஜூன் 23, 1980 ஆம் அண்டு குட்டி விமானத்தில் விமான சாகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது தனது வீட்டிற்கு பின்னால் இருந்த மரத்தில் மோதி, விமானம் நொறுங்கிய விபத்தில் உயிரிழந்தார்.
என்.வி.என் சோமு (1996)
1996 ஆம் ஆண்டு வடசென்னை எம்.பியாக இருந்த என்.வி.என் சோமு, மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சராக பதவி வகித்தார். ராணுவ முகாமிற்கு ஹெலிகாப்டரில் சென்றபோது நடந்த விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இவரது மகள் கனிமொழி சோமு தற்போது திமுக ராஜ்யசபா எம்.பியாக உள்ளார்.
மாதவராவ் சிந்தியா (2001)
மத்திய விமானப் போக்குவரத்து, மத்திய ரயில்வே இணை அமைச்சர், சுற்றுலாத் துறை அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மாதவராவ் சிந்தியா. அடுத்த பிரதமர் வேட்பாளர் என ஊடகங்களால் கூறப்பட்ட இவர், 2001 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசம் கான்பூருக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்த போது நடந்த விபத்தில் உயிரிழந்தார்.
சௌந்தர்யா (2004)
தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை சௌந்தர்யா, 2004 ஆம் ஆண்டு பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய பெங்களூருவில் இருந்து கரீம் நகருக்கு தனது சகோதரருடன் பயணித்தார். இரண்டு மாத கர்ப்பமாக இருந்த அவர், விமானம் வெடித்து சிதறிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் சென்ற அவரது சகோதரர் அமர்நாத் உட்பட அனைவரும் உயிரிழந்தனர்.
ஓ.பி ஜிண்டால் (2005)
அரியானா மின்துறை அமைச்சராக இருந்த ஓபி ஜென்டால் 2005 ஆம் ஆண்டு நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார் அவருடன் சென்ற ஹரியானா வேளாண்துறை அமைச்சர் சுரேந்தர் சிங்கும் இந்த விபத்தில் உயிரிழந்தார்.
ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி (2009)
ஆந்திர மக்களின் அசைக்க முடியாத தலைவராகவும், 2 முறை முதலமைச்சராகவும் இருந்த ராஜசேகர ரெட்டி, செப்டம்பர் 2, 2009 ஆம் ஆண்டு சித்தூரில் மக்கள் குறை கேட்பதற்காக தனி விமானத்தில் பயணம் செய்தார். அப்போது ருத்ரகொண்டா மலைக் குன்றின் மீது விமானம் நொறுங்கி விழுந்த விபத்தில் உயிரிழந்தார்.
டோர்ஜி காண்டு (2011)
அருணாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்த டோர்ஜி காண்டு 2011 ஆம் ஆண்டு ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தார். அவரது ஹெலிகாப்டர் காணாமல் போன நிலையில், தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இறுதியில் விமானம் விபத்துக்குள்ளான நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
பிபின் ராவத் (2021)
டிசம்பர் 8, 2021 அன்று இந்தியாவின் முப்படை தளபதியாக இருந்த பிபின் ராவத் குன்னூரில் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்றில் பயணம் செய்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்தார். இதில் அவரது மனைவி மதுலிக்கா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
குஜராத் விமான விபத்து (2025)
அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியாவின் AI 171 போயிங் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் குஜராத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உள்ளிட்ட பலர் பயணித்தனர். அவர்களின் நிலை என்ன ஆனது என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.