குற்றவாளியைக் காட்டிக் கொடுத்த வாழை மரம்! நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்!
ஒடிசாவில் மனைவி மற்றும் மாமியாரைக் கொலை செய்து, உடல்களைத் தோட்டத்தில் புதைத்து, வாழை மரங்களை நட்டு தடயங்களை மறைக்க முயன்ற கணவன் கைது. குடும்பப் பிரச்சனை காரணமாக இந்த கொடூர சம்பவம் நடந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கணவன்-மனைவி பிரச்சனை
ஒடிசாவின் மயூரபஞ்ச் மாவட்டத்தில் மனைவி மற்றும் மாமியாரை கொலை செய்து, உடல்களைத் தோட்டத்தில் புதைத்து அதன் மீது வாழை மரங்களை நட்டு தடயங்களை மறைக்க முயன்ற நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலைக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், ஆரம்பகட்ட விசாரணையில் கணவன்-மனைவி இடையே பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. 23 வயதான சோனாலி தலால் தனது கணவர் தேபாசிஷ் பத்ராவின் வீட்டிற்கு, தாய் சுமதி தலால் ஜூலை 12 அன்று சமரசம் செய்யும் முயற்சியில் அழைத்து வந்துள்ளார்.
குடும்ப வன்முறை
கடந்த ஜூலை 19 அன்று, குடும்ப வன்முறை உச்சக்கட்டத்தை அடைந்த நிலையில், பத்ரா தூங்கிக் கொண்டிருந்த இரண்டு பெண்களையும் கல்லால் அடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இரவு நேரம், இருட்டாகவும் மழை பெய்துகொண்டிருந்ததாலும், பத்ரா இரு உடல்களையும் தனது வீட்டின் பின்னால் இருந்த எலுமிச்சைத் தோட்டத்திற்கு எடுத்துச் சென்று புதைத்துள்ளார். பின்னர் சந்தேகம் வராமல் இருக்க, அந்த இடத்தில் வாழை மரங்களை நட்டுள்ளார்.
இதையடுத்து, பத்ரா காவல் நிலையத்திற்குச் சென்று, காணாமல் போனதாகக் காவல் புகார் அளித்துள்ளார். சோனாலி மற்றும் சுமதி இருவரும் தங்கள் மகனை விட்டுவிட்டு மயூரபஞ்சில் இருந்து புறப்பட்டுவிட்டதாக தனது மாமியார் வீட்டினரிடம் தெரிவித்துள்ளார்.
போலீசிடம் சரண்டர்
பத்ராவும் அவரது மகனும் எந்தப் பெரிய கவலையும் இல்லாமல் தொடர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், கிராம மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது எலுமிச்சைத் தோட்டத்தில் மண் தளர்ந்து காணப்படுவதையும், புதிய வாழை மரங்கள் நடப்பட்டிருப்பதையும் அவர்கள் கவனித்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பத்ராவை விசாரித்தபோது, அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு, உடல்கள் புதைக்கப்பட்ட இடத்திற்கு போலீசாரை அழைத்துச் சென்றுள்ளார்.
தோட்டத்தில் அழுகிய நிலையில் காணப்பட்ட உடல்களை போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.