டேட்டிங் ஆப்பில் காதல்.. ஒருநாள் முழுக்க ஹோட்டலில் ஜாலி.. காலையில் காத்திருந்த ஷாக்
டேட்டிங் ஆப் மூலம் பழகிய பெண்ணை நம்பி, ஹோட்டலுக்குச் சென்ற இளைஞருக்கு நடந்த சம்பவம் ஒன்று வைரலாகி வருகிறது.

டேட்டிங் ஆப் சந்திப்பு
டேட்டிங் ஆப்ஸ்கள் இன்றைய இளைஞர்களுக்கு புதிய நண்பர்களைச் சேர்த்து, ஒரே மாதிரி சிந்தனை கொண்டவர்களை அறிமுகப்படுத்திக்கொள்ளவும் ஒரு வசதியான தளமாக மாறியுள்ளது. ஆனால் இதே தளங்களில் சில குற்றவாளிகளும் புகுந்து, பயனர்களை ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலைக்கிடமாக உள்ளது. இதற்கு உதாரணமாக உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்த ஒரு சம்பவம் தற்போது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
காசியாபாத் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர், டேட்டிங் ஆப்பில் புதிய கணக்கைத் திறந்த சில நேரத்திலேயே, ஒரு பெண்ணுடன் அறிமுகமானார். ஆரம்பத்தில் நட்பாக தொடங்கிய உரையாடல், விரைவில் நெருக்கமான தொடர்பாக மாறியது. நம்பிக்கையைப் பெற்ற பிறகு, நேரில் சந்திக்க அந்தப் பெண் முன்வந்ததாகக் கூறப்படுகிறது.
அதன்படி, இருவரும் போலீஸ் நிலையம் அருகிலுள்ள ஒரு ஹோட்டலில் சந்திக்க முடிவு செய்தனர். அந்த இரவு, அவர்கள் ஹோட்டல் அறையில் தங்கியிருந்தனர். எல்லாம் சாதாரணமாக இருந்தது போல் தோன்றிய நிலையில், அடுத்த நாள் காலை அந்த இளைஞர் எழுந்தபோது, பெண் காணாமல் போனது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டேட்டிங் ஆப் மோசடி
அவரது மொபைல் போனுக்கு அழைத்தும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதே நேரத்தில், அவர் அணிந்திருந்த தங்கச் செயின் மற்றும் பணப்பையில் இருந்த பணமும் காணாமல் போனது. இதனால் தன்னை ஏமாற்றியிருப்பதை உணர்ந்த இளைஞர் உடனடியாக போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் ஹோட்டல் சிசிடிவி காட்சிகள் மற்றும் மொபைல் தகவல்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன் மூலம் சம்பந்தப்பட்ட பெண்ணை அடையாளம் கண்டு பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட தங்க நகைகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் விசாரணையில், அந்த பெண்ணுடன் இணைந்து செயல்பட்ட ஒரு கூட்டாளியும் இருப்பது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதற்கு முன்பும் இதேபோன்ற குற்றங்களில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.