மருத்துவமனையில் மோடி.. டெல்லி குண்டுவெடிப்பில் காயம் அடைந்தவர்களுடன் சந்திப்பு!
செங்கோட்டை அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் காயமடைந்து எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

டெல்லி மருத்துவமனையில் மோடி
செங்கோட்டை அருகே நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்தக் கொடூரச் சம்பவத்திற்குப் பின்னால் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் உறுதி அளித்தார்.
எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் பிரதமர்
பூட்டானில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி, விமான நிலையத்திலிருந்து நேராகப் புது டெல்லியில் உள்ள எல்.என்.ஜே.பி (LNJP) மருத்துவமனைக்குச் சென்றார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களை அவர் நேரில் சந்தித்து, அவர்களுடன் உரையாடினார். அவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.
மருத்துவமனையின் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களிடம் காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்துப் பிரதமர் விவரமாகக் கேட்டறிந்தார்.
பிரதமர் வருகையையொட்டி, மருத்துவமனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பிரதமர் மோடி ட்வீட்
டெல்லி குண்டுவெடிப்பில் பாதிகப்பட்டவர்களைச் சந்தித்த பிறகு எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி,
"எல்.என்.ஜே.பி மருத்துவமனைக்குச் சென்று டெல்லி குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களைச் சந்தித்தேன். அனைவரும் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன். இந்தக் கூட்டுச் சதிக்குக் காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்!" என்று உறுதி அளித்துள்ளார்.
Went to LNJP Hospital and met those injured during the blast in Delhi. Praying for everyone’s quick recovery.
Those behind the conspiracy will be brought to justice! pic.twitter.com/HfgKs8yeVp— Narendra Modi (@narendramodi) November 12, 2025
டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம்
கடந்த திங்கட்கிழமை (நவம்பர் 10) செங்கோட்டை சிக்னல் அருகே மெதுவாகச் சென்று கொண்டிருந்த ஒரு வாகனத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.
சேதம்: இந்தச் சம்பவத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் திங்கட்கிழமை அன்று மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களைச் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.