- Home
- இந்தியா
- கேரளாவை கைப்பற்றுவது யார்.? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் கொடுத்த அதிர்ச்சி!
கேரளாவை கைப்பற்றுவது யார்.? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் கொடுத்த அதிர்ச்சி!
Axis My India வெளியிட்ட எக்சிட் போல் கேரளாவில் ஆட்சி மாற்றத்தை சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக இளம் வாக்காளர்களின் ஆதரவு இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் என்றும் இந்த கணிப்பு தெரிவிக்கிறது. LDF கூட்டணி 39% வாக்குகளுடன் பின்தங்கியுள்ளது.

கேரள தேர்தல் கணிப்பு முடிவுகள்
கேரள அரசியல் மேடையில் இந்த முறை யார் ஆட்சியை கைப்பற்றப் போகிறார்கள் என்ற கேள்வி தேர்தல் முழுவதும் பேசுபொருளாக இருந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகியுள்ள Axis My India வெளியிட்ட எக்சிட் போல், அதிகார மாற்றத்தின் சாத்தியத்தை சுட்டிக்காட்டுகிறது. இந்த கனிப்பின் படி, பல ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்துவரும் இரு முக்கிய கூட்டணிகளுக்கிடையேயான போட்டியில், UDF கூட்டணி தெளிவான முன்னிலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புள்ளிவிவர ரீதியாக பார்க்கும்போது, UDF கூட்டணிக்கு சுமார் 44 சதவீத வாக்குகள் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தற்போது ஆட்சியில் உள்ள LDF கூட்டணிக்கு 39 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. NDA கூட்டணி 14 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. வாக்கு சதவீதத்தில் 5 சதவீத வித்தியாசம் இருப்பது, இந்த முறை ஆட்சிப் பரிமாற்றத்துக்கான வாய்ப்பை வலுப்படுத்துகிறது.
இந்த கருத்துக்கணிப்பின் முக்கிய அம்சம் வயது வாரியான வாக்காளர் நடத்தை பற்றிய ஆய்வாகும். குறிப்பாக இளம் வாக்காளர்கள் மத்தியில் ஏற்பட்ட மாற்றம் தேர்தலை தீர்மானிக்கும் அளவுக்கு உள்ளது. முதல்முறை வாக்களித்தவர்களில் 51 சதவீதம் பேர் UDF-க்கு ஆதரவளித்துள்ளனர். இது கடந்த தேர்தலை ஒப்பிடும்போது 13 சதவீதம் அதிகரிக்கும். இதேவேளை, LDF கூட்டணிக்கு இவ்வகை வாக்காளர்களிடமிருந்து ஆதரவு 13 சதவீதம் குறைந்துள்ளது.
கேரளாவில் ஆட்சி அமைப்பது யார்?
20 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடமும் UDF கூட்டணிக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளதாக இந்த ஆய்வு காட்டுகிறது. வேலைவாய்ப்பு, வளர்ச்சி, சமூக மாற்றம் போன்ற விஷயங்களில் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை UDF திறம்பட பயன்படுத்தியதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதே நேரத்தில், ஆளும் LDF கூட்டணியின் மீது இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட ஏமாற்றமும் வாக்கு மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம்.
மாறாக, மூத்த குடிமக்கள் பிரிவில் மட்டும் LDF கூட்டணி சிறிய முன்னிலை வைத்திருப்பதாக கணிப்பு கூறுகிறது. இது பாரம்பரிய ஆதரவு வங்கியை LDF இன்னும் முழுமையாக இழக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. இருப்பினும், இளம் வாக்காளர்களின் பெரும் மாற்றம் இந்த முன்னிலையை சமநிலைப்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளது.
மொத்தத்தில், இந்த எக்சிட் போல் கேரள அரசியலில் முக்கியமான மாற்றம் நிகழக்கூடும் என்பதை சுட்டிக்காட்டுகிறது. இளம் தலைமுறையின் வாக்குகள் அரசியல் கணக்குகளை மாற்றியமைத்துள்ளன. ஆனால், இறுதி முடிவுகள் வெளிவரும் வரை எந்த கணிப்பும் உறுதியாகக் கருத முடியாது. மே 4ஆம் தேதி வெளியாகும் அதிகாரப்பூர்வ முடிவுகளே கேரளத்தின் அரசியல் பாதையைத் தீர்மானிக்கும்.

