சாதனை படைந்த சந்திரயான்-2.. நிலவில் சூரியப் புயலின் தாக்கம் பற்றி அரிய கண்டுபிடிப்பு!
இஸ்ரோவின் சந்திரயான்-2 விண்கலம், சூரியனின் 'கொரோனல் மாஸ் எஜெக்ஷன்' நிலவின் மீது மோதியதை முதன்முறையாக நேரடியாகக் கண்காணித்து சாதனை படைத்துள்ளது. இந்த நிகழ்வின்போது நிலவின் புறக்கோளத்தின் அழுத்தம் பத்து மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.
சாதனை படைத்த இஸ்ரோவின் சந்திரயான்-2 விண்கலம்
இந்திய விண்வெளி ஆய்வு வரலாற்றில் மற்றொரு மைல்கல்லாக, சந்திரயான்-2 விண்கலம், நிலவின் மீது சூரியனின் 'கொரோனல் மாஸ் எஜெக்ஷன்' (Coronal Mass Ejection - CME) எனப்படும் பெரும் வெடிப்பின் நேரடித் தாக்கத்தை முதன்முறையாகக் கண்காணித்து உறுதி செய்துள்ளது. இது, நிலவின் மெல்லிய வளிமண்டலம் (Exosphere) மற்றும் விண்வெளி வானிலை குறித்த நமது புரிதலைப் புரட்டிப் போடும் ஒரு முக்கிய நிகழ்வாகும்.
அபூர்வ நிகழ்வைப் பதிவு செய்த CHACE-2
சந்திரயான்-2-ல் உள்ள முக்கிய அறிவியல் கருவிகளில் ஒன்றான 'சந்திராஸ் அட்மாஸ்பெரிக் காம்போசிஷன் எக்ஸ்ப்ளோரர்-2 (CHACE-2)' கருவிதான் இந்த அபூர்வ நிகழ்வைச் சமீபத்தில் பதிவு செய்துள்ளது.
கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 19), சூரியனில் இருந்து அதிவேகத்தில் வெளியேறிய 'கொரோனல் மாஸ் எஜெக்ஷன்' நிலவின் மீது மோதியது. இதன் காரணமாக, நிலவின் பகல்நேர புறக்கோளத்தின் மொத்த அழுத்தத்தில் (Total Pressure) கணிசமான அதிகரிப்பு காணப்பட்டது.
இந்த அழுத்த அதிகரிப்பிலிருந்து பெறப்பட்ட நடுநிலை அணுக்கள் அல்லது மூலக்கூறுகளின் மொத்த எண்ணிக்கை அடர்த்தி (Total Number Density), வழக்கமான சூழலைவிடப் பத்து மடங்குக்கு மேல் அதிகரித்திருந்தது தெரியவந்துள்ளது.
சூரியப் புயல் நிலவின் வளிமண்டலத்தில் இப்படி ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இதுவரை கோட்பாடுகள் மட்டுமே கணித்து வந்த நிலையில், சந்திரயான்-2 தான் இதை முதல் நேரடி ஆய்வு மூலம் உறுதி செய்து, அக்கோட்பாடுகளைச் செயல்விளக்கம் அளித்து நிரூபித்துள்ளது.
நிலவின் வளிமண்டலமும் புறக்கோளமும்
பூமியைப் போல் அடர்த்தியான வளிமண்டலம் நிலவுக்கு இல்லை. நிலவின் மீது இருப்பது 'புறக்கோளம்' (Exosphere) என்று அழைக்கப்படும் மிகவும் மெல்லிய, நொறுங்கிவிடக்கூடிய வாயுப் படலமே ஆகும். சூரியக் கதிர்வீச்சு, சூரியக் காற்று மற்றும் விண்கல் மோதல்கள் ஆகியவை நிலவின் மேற்பரப்பில் இருந்து அணுக்களைத் தட்டி எழுப்பி இந்தப் புறக்கோளத்தை உருவாக்குகின்றன.
இத்தகைய மெல்லிய சூழலில், சூரியனில் இருந்து வெளிப்படும் 'கொரோனல் மாஸ் எஜெக்ஷன்' போன்ற சிறிய மாற்றங்கள் கூட, நிலவின் வளிமண்டலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
'கொரோனல் மாஸ் எஜெக்ஷன்' என்பது சூரியன் தனது கட்டுமானப் பொருட்களான அயனிகளைப் பெருமளவில் வெளியேற்றும் நிகழ்வாகும். இந்த வெடிப்பின் தாக்கம் நிலவின் மீது அதிகமாக இருப்பதற்குக் காரணம், பூமிக்கு உள்ளது போல் நிலவுக்குச் சுழலும் உலகளாவிய காந்தப்புலம் இல்லை. மேலும், நிலவு முற்றிலும் காற்று அற்ற கோளமாக உள்ளது.
இந்த காரணங்களால், சூரிய வெடிப்பு நேரடியாக நிலவின் மீது மோதும்போது, அது மேற்பரப்பில் இருந்து அணுக்களை அதிக அளவில் தட்டி வெளியேற்றி, புறக்கோளத்தின் அழுத்தத்தை உடனடியாக உயர்த்துகிறது.
எதிர்காலத் திட்டங்களுக்கு உதவும் கண்டுபிடிப்பு
இந்த அரிய கண்காணிப்பு நிகழ்வு, கடந்த மே 10, 2024 அன்று சூரியனில் இருந்து பல 'கொரோனல் மாஸ் எஜெக்ஷன்' ஒரே சமயத்தில் வெளிப்பட்டபோது சாத்தியமானது.
இந்த முதல் நேரடி ஆய்வு, நிலவின் புறக்கோளத்தைப் பற்றிய அறிவியலைப் புதுப்பிப்பதுடன், நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கான விஞ்ஞான தளங்களை அமைக்கும் எதிர்காலத் திட்டங்களுக்கு ஒரு முக்கியக் கருத்தாக உள்ளது. விண்வெளி கட்டிடக் கலைஞர்கள், இத்தகைய தீவிர சூரிய நிகழ்வுகளைக் கணக்கில் கொள்ள வேண்டும் என்றும் இஸ்ரோ அறிவுறுத்தியுள்ளது. இந்தத் தாக்கம் குறுகிய காலத்திற்கு நிலவின் சுற்றுப்புறச் சூழலைத் தற்காலிகமாக மாற்றியமைக்கும் ஆற்றல் கொண்டது என்பதால், நிலவில் நிலையான குடியிருப்புகளை அமைக்கும் சவால்களை இந்த ஆய்வு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.