பெங்களூரு, மும்பை, சென்னை இல்லை! இந்தியாவின் 'நம்பர் 1' பணக்கார மாவட்டம் எது தெரியுமா?
India's Top 10 Richest Districts: இந்தியாவின் 'நம்பர் 1' பணக்கார மாவட்டம் எது தெரியுமா? மும்பை, பெங்களூரு, சென்னைக்கு இதில் இடமில்லை! 'InfraMantra' வெளியிட்ட டாப் செல்வந்த மாவட்டங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

இந்தியாவின் நம்பர் 1 பணக்கார மாவட்டம் - India's Top 10 Richest Districts
இந்தியாவின் நம்பர் 1 பணக்கார மாவட்டம் எது என்று கேட்டால், பலரும் மும்பை அல்லது பெங்களூரு என்றுதான் நினைப்பார்கள். ஆனால், தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் 'InfraMantra' நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய பட்டியல், இந்த எண்ணத்தை மாற்றியுள்ளது. ஆச்சரியமூட்டும் வகையில், இந்த பட்டியலில் தெலங்கானாவைச் சேர்ந்த ரங்காரெட்டி மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்த செல்வந்த மாவட்டங்கள் வெறும் பொருளாதார மையங்கள் மட்டுமல்ல, சிறந்த சுற்றுலாத் தலங்களாகவும் விளங்குகின்றன. நவீன உள்கட்டமைப்பு, சொகுசு ஹோட்டல்கள் மற்றும் பார்க்க வேண்டிய இடங்கள் என பயணிகளுக்குப் பல வாய்ப்புகளை வழங்குகின்றன. அந்த வகையில், இந்தியாவின் டாப் பணக்கார மாவட்டங்கள் மற்றும் அவற்றின் சுற்றுலா சிறப்பம்சங்களைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
பட்டியலில் இடம் பிடித்த மாவட்டங்கள்
தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டம், இந்தியாவின் பணக்கார மாவட்டமாக உருவெடுத்துள்ளதற்கு அதன் தகவல் தொழில்நுட்பம், பயோடெக்னாலஜி மற்றும் மருந்து உற்பத்தித் துறைகளே முக்கிய காரணம். ஹைதராபாத்தின் நுழைவாயிலாக விளங்கும் இந்த மாவட்டத்தில், வரலாற்றுச் சிறப்புமிக்க சார்மினார் மற்றும் கோல்கொண்டா கோட்டை போன்ற இடங்கள் சுற்றுலாப் பயணிகளைக் கவர்கின்றன.
பெங்களூரு எந்த இடம்?
ஹரியானாவில் உள்ள குருகிராம், இந்தப் பட்டியலில் அடுத்த முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. சர்வதேச 'ஃபார்ச்சூன் 500' நிறுவனங்களின் இருப்பிடமாகவும், வானுயர்ந்த கட்டிடங்களின் நகரமாகவும் இது திகழ்கிறது. இங்குள்ள சைபர் ஹப், பிரம்மாண்ட மால்கள் மற்றும் கோல்ஃப் மைதானங்கள் நவீன நகர வாழ்க்கையின் அடையாளங்களாக உள்ளன.
இந்தியாவின் சிலிக்கான் வேலி என அழைக்கப்படும் கர்நாடகாவின் பெங்களூரு அர்பன் மாவட்டம், தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல், அதன் இதமான வானிலை மற்றும் பசுமையான சூழலுக்கும் பெயர் பெற்றது. புகழ்பெற்ற லால்பாக், கப்பன் பார்க் மற்றும் பெங்களூர் அரண்மனை ஆகியவை இங்கு கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும். மேலும், கூர்க் மற்றும் மைசூர் போன்ற இடங்களுக்குச் செல்ல இது ஒரு சிறந்த தொடக்கப் புள்ளியாகவும் இருக்கிறது.
ஆச்சரியமூட்டிய மற்ற நகரங்கள்
உத்தரப் பிரதேசத்தின் கௌதம் புத் நகர் மாவட்டம், நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா பகுதிகளை உள்ளடக்கியது. இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புறங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. நவீன ஷாப்பிங் மால்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களுடன், ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு எளிதில் செல்லும் வகையில் சிறப்பான சாலை வசதிகளையும் கொண்டுள்ளது.
ஹிமாச்சலப் பிரதேசத்தின் சோலன் மாவட்டம்
ஐடி நகரங்களுக்கு மத்தியில் ஹிமாச்சலப் பிரதேசத்தின் சோலன் மாவட்டம் இடம்பிடித்திருப்பதுதான் இந்த பட்டியலின் மிகப்பெரிய ஆச்சரியம். மருந்து உற்பத்தி மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்களால் இந்த மலைப்பிரதேச மாவட்டம் செல்வச் செழிப்படைந்துள்ளது.
சிம்லாவுக்கு மாற்றாக, பைன் மரக்காடுகள் நிறைந்த அமைதியான சூழலை விரும்பும் பயணிகளுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இந்தப் பட்டியலில் சோலனைத் தவிர, வட மற்றும் தென் கோவா, சிக்கிம், தட்சிண கன்னடம், மும்பை மற்றும் அகமதாபாத் போன்ற மாவட்டங்களும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

