- Home
- இந்தியா
- புது சிம் கார்டு போட்டதும் ரஜத் பட்டிதாராக மாறிய இளைஞர்! உடனே போன் போட்ட கோலி, டி வில்லியர்ஸ்!
புது சிம் கார்டு போட்டதும் ரஜத் பட்டிதாராக மாறிய இளைஞர்! உடனே போன் போட்ட கோலி, டி வில்லியர்ஸ்!
புதிய சிம் கார்டு வாங்கிய இளைஞர் ஒருவருக்கு, கிரிக்கெட் நட்சத்திரங்களின் அழைப்புகள் வந்ததன் பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான சம்பவம். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சர்வதேச கிரிக்கெட் வீரர் ரஜத் பட்டிதாரின் பழைய எண் மீண்டும் வழங்கப்பட்டது.

மனிஷ் வாங்கிய புதிய சிம் கார்டு
சத்திஸ்கர் மாநிலம், கரிபந்த் மாவட்டத்தில் உள்ள மடகான் கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான மனிஷ் பிசி, புதிய சிம் கார்டு வாங்கச் சென்றபோது, அவரது வாழ்வில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.
கடந்த ஜூன் மாதம், தேவ்போக் பகுதியில் உள்ள ஒரு கடையில் மனிஷ் ஒரு புதிய சிம் கார்டை வாங்கினார். தனது நண்பர் கேம்ராஜின் உதவியுடன், அந்த எண்ணில் வாட்ஸ்அப்பை நிறுவியபோது, வாட்ஸ்அப் சுயவிவரப் படத்தில் சர்வதேச கிரிக்கெட் வீரர் ரஜத் பட்டிதார் புகைப்படம் தானாகவே தோன்றியது. இந்தத் தொழில்நுட்பக் கோளாறை ஒரு வேடிக்கையாக எண்ணி இருவரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், அதன்பின்னர், மனிஷின் போனுக்கு விராட் கோலி, யாஷ் தயாள் மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் போன்ற புகழ்பெற்ற கிரிக்கெட் நட்சத்திரங்களிடமிருந்து அழைப்புகள் வரத் தொடங்கின.
அழைத்த ஒவ்வொருவரும் மனிஷை "ரஜத்" என்று அழைத்தபோது, அவருக்கும் அவரது நண்பருக்கும் குழப்பமும் ஆச்சரியமும் உண்டானது. இது ஏதோ ஒரு குறும்பு வேலை என்று நினைத்து, இருவரும் பிரபல கிரிக்கெட் வீரர்களுடன் சுமார் இரண்டு வாரங்களாகப் பேசிக்கொண்டிருந்தனர்.
சைபர் செல் உதவியால் வெளிவந்த உண்மை
மறுபுறம், கிரிக்கெட் வீரர் ரஜத் பட்டிதார், தான் பயன்படுத்தாமல் இருந்த தனது பழைய எண்ணை மீண்டும் பெற முயற்சி செய்து வந்தார். தொலைத்தொடர்பு நிறுவனங்களின் விதிகளின்படி, ஆறு மாதங்களுக்கும் மேலாகப் பயன்படுத்தப்படாத எண்கள் வேறு ஒருவருக்கு ஒதுக்கப்படும். இதனால் விரக்தியடைந்த ரஜத் பட்டிதார், மத்திய பிரதேச சைபர் செல்லின் உதவியை நாடினார்.
சைபர் செல், கரிபந்த் போலீசாருடன் இணைந்து விசாரணை நடத்தியபோது, பட்டிதாரின் எண் இன்னொருவருக்கு வழங்கப்பட்டிருப்பது தெளிவாகியது.
மனிஷின் மறக்க முடியாத அனுபவம்
உடனடியாக, உள்ளூர் போலீசார் மனிஷின் கிராமத்திற்குச் சென்று, அவரிடமிருந்த சிம் கார்டை வாங்கி, ரஜத் பட்டிதாரிடம் ஒப்படைத்தனர். இதன் மூலம், ரஜத் பட்டிதார் தனது சக வீரர்களுடனும் நண்பர்களுடனும் மீண்டும் தொடர்புகொள்ள முடிந்தது.
மனிஷும் அவரது நண்பர் கேம்ராஜும், இது தங்களுக்குக் கிடைத்த மறக்க முடியாதது அனுபவம் என்று தெரிவித்துள்ளனர். கிரிக்கெட் ரசிகர்கள் என்ற முறையில், இந்தச் சம்பவம் அவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்ததாகவும், ஒரு நாள் ரஜத் பட்டிதாரை நேரில் சந்திப்போம் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளனர்.