பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ஹரியானா பெண் யூடியூபர்! யார் இந்த ஜோதி மல்ஹோத்ரா?
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டார். இவர் குறித்து திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

Who is this Spy Jyoti Malhotra?
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளின் துப்பாகிச்சூட்டில் அப்பாவி மக்கள் உயிரிழந்ததை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள பயங்கராவதிகளை நமது ராணுவ வீரர்கள் களையெடுத்தனர். இதன்பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டு பின்பு முடிவுக்கு வந்தது. இந்நிலையில், பாகிஸ்தானுக்காக உளவுபார்த்த குற்றச்சாட்டின்பேரில் ஹரியானாவின் பிரபல யூ டியூபர் ஜோதி மல்ஹோத்ராவை போலீசார் கைது செய்தனர்.
பாகிஸ்தானில் விஐபியாக வலம் வந்த ஜோதி மல்ஹோத்ரா
ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா. யூ டியூபில், 'டிராவல் வித் ஜோ' என்ற டிராவல் சேனலை நடத்தி வருகிறார். பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக நாடு கடத்தப்பட்ட டெல்லியில் உள்ள பாகிஸ்தான் துாதரக அதிகாரி டேனிஷ் என்பவருக்கும், ஜோதி மல்ஹோத்ராவுக்கும் பழக்கம் இருந்ததும் டேனிஷ் உதவியால் அவர் பாகிஸ்தான் சென்றதும் தெரியவந்தது.
மேலும் 2024ம் ஆண்டு பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் 10 நாட்கள் பயணம் மேற்கொண்ட ஜோதி மல்ஹோத்ரா, அங்கு டேனிஸ் உதவியால் போலீஸ் பாதுகாப்புடன் விஐபி போல் நடத்தப்பட்டுள்ளார்.
ஜோதி மல்ஹோத்ரா வங்கி கணக்குகள் ஆய்வு
இதனைத் தொடர்ந்து ஜோதி மல்ஹோத்ரா சீனாவும் சென்றுள்ளார். அவரின் செல்போன்கள், லேப்டாப்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்த போலீசார், இந்தியா, பாகிஸ்தான் மோதலின்போதும் ஜோதி மல்ஹோத்ரா பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
ஜோதி மல்ஹோத்ராவின் வங்கி கணக்கு, அவரின் பயண விவரங்கள், செலவுகள் ஆகியவற்றை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.
மற்றொரு யூடியூபருக்கும் தொடர்பு
மேலும் ஜோதி மல்ஹோத்ராவுக்கும், பூரியைச் சேர்ந்த யூடியூபர் ஒருவருக்கும் இடையேயான தொடர்புகள் குறித்து ஒடிசா காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது என்று அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
மல்ஹோத்ரா, செப்டம்பர் 2024 இல் பூரிக்குச் சென்று கடலோர நகரத்தில் ஒரு பெண்ணைத் தொடர்பு கொண்டதாகவும், அவர் ஒரு யூடியூபராகவும் இருந்ததாகவும் போலீசார் கண்டறிந்தனர் என்று பூரி காவல் கண்காணிப்பாளர் (SP) வினித் அகர்வால் தெரிவித்தார்.
போலீஸ் விசாரணை தீவிரம்
"பல்வேறு மத்திய நிறுவனங்கள் மற்றும் ஹரியானா காவல்துறையுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். கள சரிபார்ப்புக்குப் பிறகு ஊடகங்களுடன் விவரங்களைப் பகிர்ந்து கொள்வோம்" என்று அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்த விவகாரம் குறித்த விசாரணைக்காக ஒடிசா காவல்துறை பூரி யூடியூபரின் அடையாளத்தை வெளியிடவில்லை.