அச்சச்சோ.! ஆன்லைன் உணவு ஆர்டருக்கு இனி அதிக பணம் செலுத்தவேண்டும்.. கவலையில் மக்கள்!
ஜிஎஸ்டி விதிப்பில் வரும் மாற்றத்தால், ஒவ்வொரு ஆர்டருக்கும் சுமார் 2 முதல் 3 ரூபாய் வரை கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். சோமேட்டோ மற்றும் ஸ்விக்கி போன்ற நிறுவனங்களும் தங்கள் பிளாட்ஃபார்ம் கட்டணத்தை உயர்த்தியுள்ளன.

உணவு ஆர்டர் விலை உயர்வு
விருந்துகள், குடும்ப நிகழ்ச்சிகள், அலுவலகக் கூட்டங்கள் தவிர, வீட்டில் சமைக்க விருப்பமில்லாத நாட்களிலும் பலர் உணவு டெலிவரி செயலிகள் மூலம் உணவகங்களில் இருந்து உணவை ஆர்டர் செய்வது வழக்கமாகிவிட்டது. ஆனால் இனி அந்த சௌகரியம் சற்று அதிக செலவாக மாறப்போகிறது. அதற்கு முக்கிய காரணம் ஜிஎஸ்டி விதிப்பில் வரும் புதிய மாற்றம் ஆகும்.
ஆன்லைன் உணவு டெலிவரி
வரும் 22ஆம் தேதி முதல், உணவு டெலிவரி செயலிகள் மூலம் ஆர்டர் செய்யும் ஒவ்வொரு முறையும் சுமார் 2 முதல் 3 ரூபாய் வரை கூடுதல் செலவு அதிகரிக்கலாம். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பின்படி, உணவு டெலிவரி செயலிகள் 18% ஜிஎஸ்டி வசூலிக்கத் தொடங்குகின்றன. இதன் விளைவாக, வெளியில் இருந்து உணவு ஆர்டர் செய்வோர் அனைவருக்கும் கூடுதல் தொகை கட்ட வேண்டியிருக்கும்.
ஸ்விக்கி கட்டணம் உயர்வு
ஆன்லைன் உணவு டெலிவரி சேவைகளின் தேவை சமீப ஆண்டுகளில் வேகமாக உயர்ந்துள்ளது. காலை, நள்ளிரவு எப்போது வேண்டுமானாலும் விருப்பமான உணவு ஒரு கிளிக்கில் நமக்கு வந்து சேருவதால், மக்கள் இதனை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால் பண்டிகைக்கு முன்பாக வந்துள்ள இந்த மாற்றம் பலருக்கும் விரக்தியை ஏற்படுத்தியது.
சோமேட்டோ கட்டணம்
சோமேட்டோ தனது பிளாட்ஃபார்ம் கட்டணத்தை 10 ரூபாயில் இருந்து 12 ரூபாயாக உயர்த்தியுள்ளது. 2023-இல் 2 ரூபாயாக இருந்த கட்டணம், படிப்படியாக உயர்ந்து இப்போது 12 ரூபாயாகிவிட்டது. அதேபோல் ஸ்விக்கியும் சமீபத்தில் 12 ரூபாயில் 14 ரூபாயாக தனது பிளாட்ஃபார்ம் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனால் ஒவ்வொரு ஆர்டருக்கும் வாடிக்கையாளர்கள் கூடுதல் சுமையை சந்திக்க வேண்டியுள்ளது.
டெலிவரி ஆப் கட்டண உயர்வு
பண்டிகை காலம் என்பதால் ஆர்டர்களின் எண்ணிக்கை இயல்பாகவே அதிகரிக்கும். அந்த சூழ்நிலையை பயன்படுத்தி நிறுவனங்கள் பிளாட்ஃபார்ம் கட்டணமும், சர்ஜ் பிரைசிங்கும் உயர்த்தப்பட்டுள்ளன. மத்திய அரசின் ஜிஎஸ்டி முடிவும், நிறுவனங்களின் கட்டண உயர்வும் சேர்ந்து இறுதியில் சாதாரண வாடிக்கையாளர்களின் பையில் சுமையாக மாறும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.