கூகுள் துணைத் தலைவர் திருப்பதிக்கு ரூ.1 கோடி நன்கொடை!
கூகுள் நிறுவனத்தின் துணைத் தலைவர் தோட்டா சந்திரசேகர், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிராணதான அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். இந்த நன்கொடை ஏழை நோயாளிகளுக்கு இலவச மருத்துவ வசதிகள் வழங்க உதவும்.

கூகுள் துணைத் தலைவர் தோட்டா சந்திரசேகர்
உலகின் பணக்கார இந்து கோவில்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு, கூகுள் நிறுவனத்தின் துணைத் தலைவர் தோட்டா சந்திரசேகர் ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம்
இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திருப்பதி வந்து ஏழுமலையானைத் தரிசனம் செய்து வருகின்றனர். இந்தக் கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம், பக்தர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்வதற்காகவும், ஏழை மக்களுக்கு உதவி செய்வதற்காகவும், பொதுநலன் சார்ந்த நோக்கங்களுக்காகவும் பல்வேறு அறக்கட்டளைகளை அமைத்துள்ளது. இந்த அறக்கட்டளைகளுக்குப் பல்வேறு நன்கொடையாளர்கள் பெருமளவிலான நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.
திருப்பதி அறக்கட்டளைக்கு நிதி
அந்த வகையில், ஏழை நோயாளிகளுக்கு இலவச மருத்துவ வசதிகளை வழங்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிராணதான அறக்கட்டளைக்கு (எஸ்.வி.பிராணதான அறக்கட்டளை) கூகுள் நிறுவனத்தின் துணைத் தலைவர் திரு. தோட்டா சந்திரசேகர் ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். இதற்கான காசோலையை அவர் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் திரு. பி.ஆர்.நாயுடுவிடம் நேரில் வழங்கினார்.
தேவஸ்தான அதிகாரிகள் பாராட்டு
ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய கூகுள் துணைத் தலைவரை தேவஸ்தான அதிகாரிகள் மனதாரப் பாராட்டினர். இந்த நன்கொடை ஏழை நோயாளிகளுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதில் பெரும் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.