- Home
- இந்தியா
- யானையுடன் செல்ஃபி.! மிதி வாங்கியவருக்கு ஷாக் கொடுத்த அதிகாரிகள்: அபராதம் மட்டும் எவ்வளவு தெரியுமா?
யானையுடன் செல்ஃபி.! மிதி வாங்கியவருக்கு ஷாக் கொடுத்த அதிகாரிகள்: அபராதம் மட்டும் எவ்வளவு தெரியுமா?
கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனச்சரணாலயத்தில் காட்டு யானையுடன் செல்ஃபி எடுக்க முயன்ற நபர் யானையின் தாக்குதலுக்கு உள்ளானார். யானையிடம் மிதி வாங்கிய நபர் தான் செய்தது தவறு எனக்கூறி மன்னிப்பு கேட்டுள்ளார்.

யானையுடன் செல்ஃபி
வனப்பகுதிகள், வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலைகளில் செல்லும் போது வன விலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது என பலமுறை அறிவிப்புகள் வெளியிட்டாலும் அதையும் மீறி செல்பி எடுக்கிறேன் என வன விலங்குகளை தொந்தரவு செய்வது மட்டுமில்லாமல் உயிரையும் இழக்கும் நிலை உருவாகிவிட்டது.
அப்படி பட்ட சம்பவம் தான் கடந்த இரண்டு தினங்களாக சமூகவலைதளங்களில் வீடியோ பரவி வருகிறது. கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனச்சரணாலயத்தில், காட்டு யானையுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ஒரு நபர், யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
யானையிடம் மிதி வாங்கிய நபர்
மைசூரு-ஊட்டி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பந்திப்பூர் கெக்கனஹல்லா பகுதியில் உள்ள சாலையில் வாகனங்கள் சென்று கொண்டுள்ளது. அப்போது வனப்பகுதியில் இருந்த யானை ஒன்று மறு பக்கத்தில் செல்லும் வகையில் கடக்க முற்பட்டுள்ளது. யானையின் நடமாட்டத்தை பார்த்த மக்கள் ஓரமாக வாகனங்களை நிறுத்தினார்கள். அப்போது, கேரளாவைச் சேர்ந்த ஒருவர் தனது குடும்பத்தினருடன் காரில் வந்துள்ளார். அவர் திடீரென காரில் இருந்து இறங்கி, யானையை தனது செல்போனில் படம் பிடித்ததுடன், செல்ஃபி எடுக்க யானையின் அருகில் செல்ல முயன்றார்.
25ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த வனத்துறை
ஒரு கட்டத்தில் யானை சப்தத்தோடு அந்த நபரை துரத்தியுள்ளது. யானையின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் கால் தடுமாறி அந்த நபர் கிழே விழுந்துள்ளார். இதனையடுத்து அந்த யானை அந்த நபரை தாக்கியுள்ளது. கீழே விழுந்தவரை மிதித்த யானை அங்கிருந்து காட்டுக்குள் சென்றது. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியவர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தொடர்பாக பந்திப்பூர் வனச்சரணாலயத்தின் உதவி வனப் பாதுகாவலர் நவீன்குமார் கூறுகையில்,
தற்போது செல்போனில் படம் பிடிக்க முயன்ற நபர் யானையால் தாக்கப்பட்டுள்ளார். அந்த நபர் யார் என்பது இன்னும் தெரியவில்லை. காயமடைந்தவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதால் அவரை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த நிலையில் அந்த நபர் பசுவராஜ் என தெரியவந்துள்ளது. இந்த நபருக்கு 25ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து யானையிடம் மிதி வாங்கிய நபர் தான் செய்தது தவறு எனக்கூறி மன்னிப்பு கேட்டு வீடியோ பதிவு செய்துள்ளார்.