டெக்னாலஜில நாமதான் கெத்து! முதல் 'மேக் இன் இந்தியா' செமிகண்டக்டர் சிப்!
இந்தியாவின் முதல் உள்நாட்டு செமிகண்டக்டர் சிப் இந்த ஆண்டுக்குள் வெளியாகும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஆறு செமிகண்டக்டர் ஆலைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் சிப்
இந்தியாவின் முதல் உள்நாட்டு செமிகண்டக்டர் சிப் இந்த ஆண்டுக்குள் வெளியாகும் என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
செமிகண்டக்டர் வடிவமைப்பு
வெள்ளிக்கிழமை தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கேசவ் நினைவு கல்விச் சங்கத்தின் 85வது நிறுவன தின விழாவில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், உலகிலேயே மிக முக்கியமான செமிகண்டக்டர் நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறப்போகிறது என்று குறிப்பிட்டார்.
இன்று, ஹைதராபாத், பெங்களூரு, புனே, குருகிராம் மற்றும் சென்னை போன்ற நகரங்களில் மிகவும் சிக்கலான சிப்கள் வடிவமைக்கப்படுகின்றன என்று அவர் கூறினார்.
முதல் 'மேட் இன் இந்தியா' சிப்
"இப்போது, நாம் செமிகண்டக்டர் சிப்களை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளோம். ஏற்கனவே ஆறு செமிகண்டக்டர் ஆலைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளோம். அவற்றின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த 2025 ஆம் ஆண்டில் முதல் 'மேட் இன் இந்தியா' சிப்பை அறிமுகப்படுத்துவோம்" என்று அவர் தெரிவித்தார்.
இலவச தரவுத்தொகுப்புகள்
இந்தியா AI மிஷன் திட்டத்தின் ஒரு பகுதியாக, இலவச தரவுத்தொகுப்புகள் (datasets) மற்றும் பிற தகவல்கள் பதிவேற்றப்பட்டு வருவதாகவும் மத்திய அமைச்சர் கூறினார். "பத்து லட்சம் பேர் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டில் பயிற்சி பெற்று வருகின்றனர்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
2047ஆம் ஆண்டுக்குள் இது நடக்கும்!
மேலும், 2047 ஆம் ஆண்டுக்குள் உலகின் முதல் இரண்டு பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் என்றும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
உலகம் ஒரு பெரிய மாற்றத்திற்கு உட்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், இதுவரை பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த மேற்கத்திய நாடுகள் இப்போது குளோபல் சவுத் நாடுகளால் மாற்றம் அடைந்து வருவதாகவும் கூறினார்.