- Home
- இந்தியா
- ஏர் இந்தியா விமான விபத்து திட்டமிட்ட சதி? வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்திய விமானி? அதிர்ச்சி தகவல்!
ஏர் இந்தியா விமான விபத்து திட்டமிட்ட சதி? வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்திய விமானி? அதிர்ச்சி தகவல்!
260 பேரை பலிகொண்ட ஏர் இந்தியா விமான விபத்து ஒரு திட்டமிட்ட சதி என்று இத்தாலிய நாளிதழ் ஒன்று பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது. இந்த அதிர்ச்சிகரமான தகவல் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

ஏர் இந்தியா விமான விபத்து
கடந்த ஆண்டு குஜராத்தின் அஹமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கிளம்பிய சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மருத்துவக் கல்லூரி கட்டடம் மீது விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணி உள்பட 260 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்து இந்தியா மட்டுமின்றி உலகையே உலுக்கியது.
காக்பிட் குரல் பதிவு
இந்த விபத்து குறித்து விமான விபத்து புலனாய்வு அமைப்பு (AAIB) விசாரணை நடத்தியது. என்ஜின்களுக்குச் செல்லும் எரிபொருள் சுவிட்சுகள் Run' நிலையிலிருந்து 'Cut-off' நிலைக்கு மாற்றப்பட்டதே என்ஜின் நிறுத்தப்படக் காரணம் என்று தகவல் வெளியாகி இருந்தது.
காக்பிட் குரல் பதிவும் வெளியாகி இருந்தது. ஏன் எரிபொருள் சுவிட்சை ஆஃப் செய்தீர்கள்? என்று ஒரு விமானி கேட்க, மற்றொருவர் நான் எதையும் செய்யவில்லை என்று பதிலளித்த உரையாடல் பதிவாகி இருந்தது.
ஏர் இந்தியா விமான விபத்து திட்டமிட்ட சதி?
இந்த நிலையில், ஏர் இந்தியா விமான விபத்து ஒரு திட்டமிட்ட சதி என்று இத்தாலிய நாளிதழ் ஒன்று பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது தொழில்நுட்ப கோளாறு ஏதுமின்றி ஒரு விமானி வேண்டுமென்றே எரிபொருள் சுவிட்ச்சை அணைத்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாக இத்தாலிய நாளிதழ் கூறியுள்ளது.
விபத்தில் பலியான விமானி சுமீத் சபர்வால் கடும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதுவே இந்த முடிவுக்குக் காரணம் என்றும் செய்திகள் வெளியாகின. ஆனால் அவரது குடும்பத்தினர் இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
இத்தாலிய நாளிதழ் செய்திகள் தவறானவை
ஆனால் இந்த தகவலை விமான விபத்து விசாரணை பணியகம் மறுத்துள்ளது. ஏர் இந்தியா விமானம் AI-171 விபத்து தொடர்பான விசாரணை முடிந்துவிட்டதாகக் கூறும் செய்திகள் தவறானவை மற்றும் ஊகத்தின் அடிப்படையிலானவை என்று விமான விபத்து விசாரணை பணியகம் திட்டவட்டமாக தெளிவுபடுத்தியுள்ளது.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது. சரிபார்க்கப்படாத செய்திகள் தேவையற்ற பொதுக் கவலையை ஏற்படுத்துவதோடு, தொழில்முறை விசாரணையின் நேர்மையைக் குலைக்கின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.

