மாதவிடாய் நின்ற பின்னும் ரத்தக்கசிவு.. இந்த நோயின் அறிகுறியா இருக்கலாம்
Menopause and Bleeding : மாதவிடாய் சுழற்சி நின்ற பின் இரத்தக் கசிவு ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

மாதவிடாய் நின்ற பின்னும் ரத்தக்கசிவு.. இந்த நோயின் அறிகுறியா இருக்கலாம்
மெனோபாஸ் காலத்தில் பெண்களின்பாடு திண்டாட்டம் தான். மாதவிடாய் நிற்பதை தான் மெனோபாஸ் என்கிறோம். பிரசவகாலத்தில் இருப்பது போலவே உடல்ரீதியான மனரீதியான பாதிப்புகள் மெனோபாஸ் காலத்திலும் ஏற்படலாம். மனரீதியாக சில தடுமாற்றங்கள், சோர்வு வரக்கூடும். பொதுவாக மெனோபாஸ் காலத்தில் ஏற்படக்கூடிய அறிகுறிகள் அனைத்தும் அந்த காலகட்டம் முடியும்போது மெல்ல சரியாகிவிடும். ஒருவேளை அவை தீவிரமாக இருந்தால் அதை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை சந்திக்க வேண்டும். மாதவிடாய் நின்ற பின்னர் உங்களுக்கு ரத்தக்கசிவு ஏற்படும்பட்சத்தில் அதை அலட்சியம் செய்யாமல் ஏன் கவனம் செலுத்த வேண்டும்? அது எதற்கான அறிகுறி என்பதை இந்த பதிவில் காணலாம்.
மெனோபாஸ் என்றால்?
பெண்களுடைய 41 வயது முதல் 50 வயதுக்குள் அவர்களுடைய மெனோபாஸ் அறிகுறிகள் தென்படும். சிலருக்கு முன்கூட்டியோ, சிலருக்கு தாமதமாகவோ வரலாம். அனைத்து பெண்களுக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருக்கும் என சொல்லிவிட முடியாது. சிலருடைய மாதவிடாய் நிற்றல் என்பது 10 ஆண்டுகள் வரையில் கூட இருக்க வாய்ப்புள்ளது. இது தனி நபர்களின் உடல் நிலையை பொறுத்தது. மாதவிடாய் முற்றிலும் நின்ற பின்னர் பெண்களுடைய உடலில் சுரக்கப்படும் ஈஸ்ட்ரோஜன் சுரக்காது.
ஈஸ்ட்ரோஜன் சுரக்காவிட்டால் என்னாகும்?
ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் சுரப்பு எலும்புகள், தோல், இதயம் ஆகியவற்றிற்கு தேவையானது. இந்த சுரப்பில் வரும் ஏற்ற தாழ்வுகள் தான் மாதவிடாயின்போது மூட்டு வலி, முதுகுவலி அறிகுறிகளாக வெளிப்படுகிறது. இந்த ஹார்மோன் சுரப்பு குறைந்தால் பெண்களின் பிறப்புறுப்பு சருமம் வறண்டுவிடும். இதன் காரணமாக அரிப்பு, எரிச்சல் போன்றவை வரலாம். இதை கவனிக்காமல் விட்டால் தொற்று வரும் அபாயம் உள்ளது. பிறப்புறுப்பு மென்மையான சருமம். அங்கு அதிகமான அரிப்பு உண்டாகினால் தோலில் காயம் உண்டாகி ரத்தக்கசிவு வரலாம்.
இதையும் படிங்க: பெண்களே.. இளம் வயதிலேயே மாதவிடாய் நின்றுவிடுகிறதா? இதுவும் காரணமாக இருக்கலாம் - டாக்டர்ஸ் அட்வைஸ்!
ரத்தகசிவை அலட்சியம் செய்ய வேண்டாமே!
41 வயது முதல் 50 வயதுக்குள் இருக்கும் பெண்கள் மெனோபாஸ் அறிகுறிகள் தென்படும் போது அலட்சியம் செய்யக் கூடாது. அவ்வப்போது மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம். மாதவிடாய் முற்றிலுமாக நின்ற பிறகு கர்ப்பப்பை பரிசோதனை, கர்ப்பப்பை வாய் பரிசோதனை ஆகியவற்றை மருத்துவரிடம் ஆலோசித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்த பரிசோதனைகள் எளிமையானது. இதனால் வலி ஏதும் ஏற்படாது. புற்றுநோய்க்கான வாய்ப்போ, அறிகுறிகளோ இருந்தால் இந்த பரிசோதனையின் மூலம் தெரிந்துகொள்ள முடியும். மாதவிடாய் முற்றிலும் நின்ற பின்னர் கொஞ்சம் ரத்தக்கசிவு ஏற்பட்டால் கூட மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். பரிசோதனையில் புற்றுநோய்க்கான அறிகுறி இருந்தாலும் தொடக்கத்திலேயே அதை சிகிச்சை செய்தால் குணமாகிவிடும்.
கர்ப்பப்பை அகற்றம்:
சில பெண்களுக்கு கர்ப்பப்பை அகற்றும் சூழல் வரலாம். குழந்தை பிறந்த பிறகு அல்லது குழந்தை பிறப்புக்கு முன்னர் சில மருத்துவ காரணங்களால் கர்ப்பப்பையை அகற்றுவார்கள். இந்த நேரங்களில் ஒரு வேளை கர்ப்பப்பை வாயை நீக்காமல் இருந்தால் அங்கு புண்கள் வர வாய்ப்புள்ளது. கர்ப்பபை உள்ளுறுப்பு என்பதால் வெளியில் இதன் அறிகுறிகள் தெரியாது. ஆனால் அங்கு ரத்தக்கசிவு ஏற்படலாம்.
இதையும் படிங்க: மாதவிடாய் சமயங்களில் பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய சூப்பர் ஃபுட்கள்!
கர்ப்பப்பை புற்றுநோய் அறிகுறி:
பெண்ணுறுப்பில் புண்கள் வந்து ரத்தகசிவு இருப்பது கர்ப்பப்பை புற்றுநோயின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். இப்படி பிறப்புறுப்பில் புண்கள் வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.