சினிமா பாணியில் கார் மீது வெடிகுண்டு வீச்சு.. ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய மருது சேனை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணன்!
மதுரையில் வெடிகுண்டு வீசி மருது சேனை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணனை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
adhinarayanan
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகிலுள்ள மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன் (55). இவர், மருது சேனை அமைப்பின் தலைவராக இருந்து வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் அமமுக கூட்டணியில் ஆதிநாராயணன் போட்டியிட்டார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு மருது சேனை அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.
adhinarayanan
இந்நிலையில், நேற்று மதியம் தனது அலுவலகத்தில் இருந்து கள்ளிக்குடி - விருதுநகர் நான்கு வழி சாலையிலுள்ள மையிட்டான்பட்டிக்கு காரில் புறப்பட்டு சென்றுக்கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிர் திசையில் வேகமாக வந்த கார் ஒன்று ஆதிநாராயணன் கார் மீது மோதியுள்ளது. பின்னர் ஆதிநாராயணன் காரை நோக்கி பெட்ரோல் குண்டு வீசி உள்ளது. ஆனால், காரின் மீது வெடிகுண்டு விழவில்லை. உடனே சுதாரித்துக்கொண்ட கார் ஓட்டுநர் பள்ளத்தில் காலை இறக்கி தப்பிக்க முயன்றார். ஆனாலும், அக்கும்பல் மீண்டும் பெட்ரோல் குண்டு வீச முயன்றது.
adhinarayanan
அப்போது காரின் முன் பகுதியில் குண்டு விழுந்து வெடித்தது. தொடர்ந்து, அந்த கும்பல் அங்கிருந்து காரில் தப்பியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கள்ளிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் மருது சேனை அமைப்பின் தலைவர் பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.