ஷாக்கிங் நியூஸ்.. ஹோட்டலில் வாங்கிய குடிநீர் பாட்டிலில் செத்துக்கிடந்த பல்லி..!
குளித்தலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டலில் வாங்கிய குடிநீர் பாட்டிலில் பல்லி செத்துக் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாளுக்கு நாள் மக்களின் தேவைகள் அதிகரிப்பதற்கு ஏற்றவாறு புற்று ஈசல் போல் ஹோட்டல்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அவ்வாறு நாளுக்கு நாள் திடீர் திடீரென முளைக்கும் உணவகங்களில் முறையாக உணவு சமைக்கப்படுகிறதா? முறையாக உணவுப் பொருட்கள் பதப்படுத்தப்படுகின்றனவா? என்பது மிகப்பெரிய கேள்விக் குறியாகவே உள்ளது.
சமீபத்தில் சாம்பாரில் பல்லி, சுகாதாரமில்லாத இறைச்சி, பிரியாணியில் பல்லி, கரப்பான் பூச்சி ஆகியவை கிடப்பதாக அதுவும் பிரபல ஹோட்டல்கள் தயாரித்து தரும் உணவில் கிடப்பதாக பலரும் வீடியோவுடன் ஆதாரங்களுடன் வெளியிட்டு புகார் அளித்து வருகின்றனர். இந்நிலையில், குடிநீர் பாட்டிலில் பல்லி செத்துக் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த வாலிபர் ஹோட்டல் ஒன்றில் குடிநீர் பாட்டில் ஒன்றை வாங்கியுள்ளார். தண்ணீர் குடிப்பதற்காக அந்த பாட்டிலை எடுத்தபோது, அந்த பாட்டில் உள்ளே இறந்த நிலையில் பல்லி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்நிலையில், குடிநீர் பாட்டிலில் பல்லி இறந்து கிடந்தது தொடர்பாக வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.