மொறுமொறு தக்காளி தோசை.. இப்படி ஈஸியா சுவையா செஞ்சு அசத்துங்க!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது தோசை. அந்தவகையில், மொறுமொறுப்பான தக்காளி தோசையை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தென்னிந்தியாவில் பிரபலமான காலை உணவு, அதுவும் குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய உணவுப்பட்டியலில் முதலில் இருப்பது எதுவென்றால், இட்லியும், தோசையும் தான். பொதுவாகவே, பல வீடுகளில் இந்த இரண்டு உணவுகள் தான் காலை மற்றும் இரவு உணவாக இருக்கும். அதிலும் குழந்தைகளுக்கு இட்லியை விட தோசை என்றால் ரொம்பவே இஷ்டம். காரணம், தோசையில் பல வகைகள் உள்ளன. உதாரணமாக, முட்டை தோசை, பொடி தோசை, ஆனியன் தோசை, அடை தோசை போன்றவை.. எனவே, இன்று சற்று வித்தியாசமாக தக்காளி வைத்து தோசை செய்யலாம்.
தக்காளி தோசையா என்று ஆச்சரியப்படுறீங்களா..? ஆனால், இந்த தோசையை செய்து உங்கள் வீட்டு குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். வழக்கமாக, நாம் தக்காளி வைத்து சட்னி, குழம்பு, சாதம் போன்றவையே தான் அதிகமாக செய்திருப்போம். ஆனால் இன்று தக்காளி வைத்து மொறுமொறு தோசை செய்யலாம் வாங்க..! இப்போது, மொறுமொறு தக்காளி தோசையை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
தக்காளி -5 (நன்கு பழுத்தது)
பச்சரிசி - 1கப்
புழுங்கல் அரிசி - 1கப்
உளுத்தம் பருப்பு - 1/2கப்
காய்ந்த மிளகாய் - 8
சோம்பு - 1ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை: இந்த தோசை செய்ய முதலில், பருப்பு மற்றும் அரிசியை நன்றாக கழுவி, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சுமார் 2 மணி நேரம் ஊற வையுங்கள். பிறகு அதை தண்ணீர் இல்லாமல் நன்கு வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது கிரைண்டர் அல்லது மிக்ஸி ஜாரில் ஊற வைத்த அரிசி, உளுத்தம் பருப்பு, சோம்பு, காய்ந்த மிளகாய், தக்காளி மற்றும் உப்பு ஆகியவை சேர்த்து தோசை பதத்திற்கு அரைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சுமார், 2 மணி நேரம் கழித்து எண்ணெய் ஊற்றி தோசை சுட்டு எடுக்கவும். அவ்வளவு தான் இப்போது சத்தான மொறுமொறு தக்காளி தோசை ரெடி!!